Tuesday, October 20, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியினர் தனி கூட்டணி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து புதிய முன்னணி உருவாக்கப்படவுள்ளது. இந்த முன்னணி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துக் களமிறங்கவிருப்பதாக அறியமுடிகின்றது. இது தொடர்பிலான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தை, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தலைமையில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
 
இந்த முன்னணிக்கு, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே ஆதரவளிக்கவிருக்கின்றனர். இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.
 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, அதன் பொறுப்பை அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment: