Sunday, December 13, 2015

இலங்கை அகதிகள் முகாம்களில் டைரக்டர் மு.களஞ்சியம் உதவி!

Sunday, December 13, 2015
திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் ஏற்கனவே தமிழர் நலம் பேரியக்கம் என்கிற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.. இந்த அமைப்பு மூலமாக, புலம் பெயர்ந்து வந்து, இங்கு அகதிகளாக தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு அவ்வப்போது கல்வி உதவி உட்பட பல உதவிகளை சத்தமில்லாமல் செய்துவருகிறார்.
 
தற்போது பெய்த அடைமழைக்கு கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாமும் தப்பவில்லை.. அங்கே நேரடியாக சென்ற இயக்குனர் மு.களஞ்சியம் அங்குள்ள மக்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமயத்திலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு மேல் சப்பாத்தி தயார் செய்து கொடுத்து பலரது பசியையும் இவர் தணித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Friday, December 4, 2015

114 ஆண்டுக்கு பின் சென்னையில் கனமழை!!

Friday, December 4, 2015
சென்னை:சென்னையில், 114 ஆண்டுகளுக்கு பின், டிசம்பர் மாதத்தில், நேற்று, மிக அதிகமாக மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவ மழையின் போது, நவ., மற்றும் டிச., மாதங்களில் அதிகளவு மழை பதிவாகும். டிசம்பர் மாதத்தில், மிக அதிக அளவாக, 1901 டிச., 10ல், 26 செ.மீ., மழை பதிவானது; 2005 டிச., 3ல், 23 செ.மீ., மழை பதிவானது. தற்போது, டிச., 1 காலை, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 வரையிலான, 24 மணி நேரத்தில் சென்னையில், 29 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. ஒரு நுாற்றாண்டுக்கு பின், சென்னையில் டிசம்பர் மாதம் பெய்த, மிக அதிகபட்ச மழை அளவு இது தான்.

மழைக்கு 9 பேர் பலி-நிவாரணம் அறிவிப்பு:

தமிழகத்தில், கன மழைக்கு பலியான, ஒன்பது பேரின் குடும்பங்களுக்கு, தலா, நான்கு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பருவ மழை தீவிரத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில், கால்வாயில் தவறி விழுந்தும், மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், ஒன்பது பேர் இறந்துள்ளனர். இதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் குடும்பத்திற்கு தலா, நான்கு லட்சம் ரூபாய், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பாதிப்பு பகுதிகளில் முதல்வர் பார்வை:

முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை ஹெலிகாப்டர் மூலம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பார்வையிடுகிறார். நேற்றே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. 'மோசமான வானிலையால், ஹெலிகாப்டர் பறக்க இயலாது' என, பைலட்கள் தெரிவித்ததால், வெள்ளம் பாதித்த பகுதிகளை, முதல்வர் இன்று பார்வையிடுகிறார்.