Thursday, April 13, 2017

புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றேன் முன்னாள் புலி சாட்சியம்!

புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றேன் முன்னாள் புலி சாட்சியம்!
மோட்டார் சைக்கிளில் சிறுவனை அழைத்துக்கொண்டு கம்பஹா வெலிவேரிய பகுதியில் உள்ள மைதானத்துக்கு அருகில் செல்லுமாறு பணிக்கப்பட்டது.  புலிகளின் பணிப்பின் பிரகாரமே நான் செயற்பட்டேன். எனினும், குறித்த சிறுவன் தற்கொலை குண்டுதாரி என்று எனக்கு தெரியாது என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் காசிரட்னம் பிரதீபன் சாட்சியமளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை, ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் சம்பவம் இடம்பெற்ற அதேநாளில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றது. மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரேபா சுவர்ணாதிபதி முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையை, அரச சிரேஷ்ட சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க நெறிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், வழக்கின் இரண்டாவது பிரதிவாதி சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த காமினி அல்விஸ், அரச சாட்சியாளரக பெயரிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் காசிரட்னம் பிரதீபனிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார். இதன்போது சாட்சியம் வழங்கிய அவர், வன்னி பிரதேசத்தில் இருந்த போது புலிகள் அமைப்பில் சேரமான் என்ற பெயரிலேயே அழைப்பார்கள். இந்த வழக்கு தொடர்பில் நான் பொய் சொல்லவில்லை. 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி நான் கைது செய்யப்படும் வரையிலும், மொரிஸ் என்பவரின் கீழேயே கடமையாற்றியிருந்தேன்.
சம்பவம் இடம்பெற்ற நாளில் இருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வெலிவேரிய விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்றேன். முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே மரணம் தொடர்பில் இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணையின் போது நான் அழுதேன். அதன் போது, மொரிஸூடன் குண்டைக்கட்டிக்கொண்டு சென்றதை ஏற்றுக்கொண்டேன். விடுதலைப் புலிகள் அமைப்புடன் வன்னியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மொரிஸை கஜன் என்றுதான் அழைப்பார்கள்.
ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே மீதான தற்கொலை குண்டு தாக்குதலின் போது குண்டுதாரியை என்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். தற்கொலை குண்டுதாரி என்பதை அறியாமலே அவரை அழைத்துக்கொண்டு போனேன். சம்பவம் இடம்பெற்ற முதல் நாள் மொரிஸூடன் வெலிவேரிய விளையாட்டு மைதானத்தை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றேன். சம்பவம் இடம்பெற்ற அன்று அதிகாலை 3 மணிக்கு மொரிஸ் எனக்கு அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார். தான் சுகததாஸ அரங்கத்திற்கு முன்பாக நிற்பதாகவும், 4 மணியளவில் என்னை வருமாறும் கூறியிருந்தார். அதன்படி, அந்த இடத்திற்கு சென்றேன். இதன் போது மொரிஸ் எனக்கு தொலைபேசி ஒன்றை கொடுத்தார். அத்துடன், மொரிஸ் என்னுடன் மோட்டார் சைக்களில் ஏறிக்கொண்டார்.
நாங்கள் இருவரும் வெலிவேரிய மைதானத்தை கடந்து சென்ற போது வீதியின் வலது பக்கம் சிறுவன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். சிறுவன் இருந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு மொரிஸ் கூறினார். அந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது மொரிஸ் இறங்கிவிட்டார். அந்த சிறுவனை ஏற்றிக்கொண்டு சென்று வெலிவேரிய விளையாட்டு மைதானத்தில் இறக்கிவிடுமாறு கூறினார். அந்த சிறுவன் தற்கொலை குண்டுதாரி என எனக்கு தெரியாது. புலிகள் கூறியதையே நான் செய்தேன் என சட்டத்தரணி கேட்ட கேள்விகளுக்கு சாட்சியம் வழங்கியிருந்தார்.
மேலும், எனக்கு பொலிஸ் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அத்துடன், என்னை சோதனைக்கும் உட்படுத்தவில்லை. அந்த சிறிய நேரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன என அவர் சாட்சியம் வழங்கியிருந்தார். இந்நிலையில், குறித்த வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி காலை 07.40 மணிக்கு வெலிவேரிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இந்த தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 96 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் மொரிஸ் என்று அழைக்கப்படும் செல்வராஜா கிருபாகரன், சம்பவம் இடம்பெற்ற போது கம்பஹா மாவட்டத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் செனரத் லக்ஷ்மன் குரே, விடுதலைப் புலி அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தனுஷ் என்றழைக்கப்படும் தம்பையா பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, April 1, 2017

இலங்கை சிறையிலிருந்து 38 தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை சிறையிலிருந்து 38 தமிழக மீனவர்கள் விடுதலை!
 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. அவர்கள் இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
 
 இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் 30 மீனவர்கள் மற்
றும் வவுனியா சிறையிலிருந்து 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.