Friday, November 27, 2015

ரஷிய மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த ரஷிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. ரஷிய விமானம் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியதால் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால், ரஷியா இதை மறுத்து வருகிறது.
 
இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. துருக்கிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். இதன் முதல் கட்டமாக துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு செய்துள்ளது.
 
இது சம்பந்தமான வரைவு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மெட்வதேவ் கூறி இருக்கிறார்.
முன்னதாக துருக்கிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 15 சதவீத விவசாய பொருட்களுக்கு ரஷியா தடை விதித்துள்ளது. இந்த பொருட்கள் மக்கள் சாப்பிடும் அளவுக்கு தரமானதாக இல்லை என்று கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
துருக்கி நாட்டில் விளையும் விவசாய பொருட்கள் பெருமளவு ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துருக்கியின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ரஷியாவுடனான வர்த்தகம் 2–வது இடத்தில் உள்ளது. இந்த தடையால் துருக்கிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
 
மேலும் ரஷிய நாட்டினர் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மூலம் துருக்கிக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்து வந்தது குறிப்பாக ரஷிய நாட்டினர்தான் அங்கு அதிகமாக சுற்றுலா வருவது வழக்கம். ரஷியாவின் இந்த தடையால் இதன் வருமானமும் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது வடக்கில் புலி தீவிரவாதிகளின் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட தாம் இடமளிக்கவில்லை: கோத்தபாய ராஜபக்ச!

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது வடக்கில் புலி தீவிரவாதிகளின் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட தாம் இடமளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக கோத்தபாய ராஜபக்ச, இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிவிட்டு, வெளியேறும் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
புலி தீவிரவாதிகளின் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக வடக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கோத்தபாய, எனது காலத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை. நான் தற்போது பாதுகாப்புச் செயலாளர் அல்ல. எனது காலத்தில், அவற்றை ஒட்ட இடமளிக்கவில்லை. இதனால்தான் ஆணைக்குழுக்களுக்கு வந்து செல்கிறோம் என்றார்.