Wednesday, September 23, 2015

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சுக்கான பொறுப்புக்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்கப்படவில்லை!

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சுக்கான பொறுப்புக்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த 4ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சுசில் பிரேமஜயந்த அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் அமைச்சராகவே சுசில் பிரேமஜயந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

எனினும், நேற்று அரச வர்த்தமானியில் அமைச்சுக்களுக்கான பெயர், பொறுப்பு விபரங்கள் பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்ட போது, அமைச்சின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சு என சுசிலின் அமைச்சுப் பதவியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே நேற்று வர்த்தமானியில் துறைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சின் பெயர் மாற்றமடைந்திருந்தாலும், தமக்கு வழங்கப்பட்டுள்ள துறைகளின் அடிப்படையில் நாட்டுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற விரும்புவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றம் தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment