Wednesday, September 23, 2015

எல்லா விஷயமும் அவருக்கு தெரியும்' : 'அட்டாக்' பாண்டி 'திடுக்' தகவல்!

Wednesday, September 23, 2015
மதுரை: மதுரை தி.மு.க., பிரமுகர், 'பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில் சிக்கியுள்ள, 'அட்டாக்' பாண்டி, முக்கிய பிரமுகரின் பெயரை குறிப்பிட்டு, 'எல்லா விஷயமும் அவருக்கு தெரியும்' என, தெரிவித்து உள்ளார்.

கடந்த, 2013 ஜன., 31ம் தேதி, மதுரை, சத்யசாய் நகரில், 'பொட்டு' சுரேஷ், 46, கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில், இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த பிரபல ரவுடி, 'அட்டாக்' பாண்டி, 42, கடந்த 20ம் தேதி இரவு, சுற்றி வளைக்கப்பட்டார்.
உணவகத்தில் சிக்கினார் :
 
நவி மும்பையில் உள்ள, 'கபில் ரெஸ்டாரென்டில்' பாண்டி இருந்தபோது, அம்மாநில போலீசாரும், சென்னை ஒருங்கிணைந்த குற்ற தடுப்புப் பிரிவு போலீசாரும், பாண்டியை மடக்கினர். இத்தகவல், மதுரை கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் இருந்து சென்றால், கைது விவரம் தெரிந்து பரபரப்பாகிவிடும் என்பதால், கோவை, சென்னை வழியாக, துணை கமிஷனர் சாமந்த்ரோகன் ராஜேந்திரா, 'பொட்டு' சுரேஷ் கொலை வழக்கை விசாரிக்கும், மதுரை, சுப்ரமணியபுரம் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, தனிப்படை எஸ்.ஐ., முருகேசன் ஆகியோர், விமானத்தில் மும்பை அனுப்பப்பட்டனர்.அன்றிரவு, போலீசாரை சந்தித்த அதிர்ச்சியில், பாண்டி எதுவும் பேசவில்லை. நேற்று முன்தினம், 21ம் தேதி பிற்பகல், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். '29ம் தேதிக்குள், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என்ற நிபந்தனையுடன், மதுரை போலீசார், பாண்டியை அழைத்துச்செல்ல அனுமதி கிடைத்தது.
விமானத்தில் வருகை:
 
உடனே, மும்பையில் இருந்து, சென்னை வழியாக மதுரை வரும் விமானத்தில், 'புக்' செய்யப்பட்டு, நேற்று அதிகாலை விமானத்தில், '8டி' எண் கொண்ட நடு இருக்கையில் பாண்டியும், இருபுறமும் இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ.,யும் அமர்ந்து கொண்டனர். நேற்று காலை 7:25 மணிக்கு, விமானம் மதுரை வந்து சேர்ந்தது. பயணிகளுடன் இறங்கிய அவர்கள், சிறப்பு அனுமதி பெற்று, வி.ஐ.பி.,க்கள் வரும் வழியாக, காரில் வெளியே வந்தனர். பாண்டியை, பத்திரிகையாளர்களின் கண்ணில் காட்டாமல், மதுரை ஆயுதப்படை மைதானத்தில், கமிஷனரின் கீழ் இயங்கும், எஸ்.ஐ.சி., எனப்படும், சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
'திடுக்' தகவல்:
 
பின், எஸ்.ஐ.சி.,யில், துணைக் கமிஷனர் சாமந்த்ரோகன் தலைமையில், பாண்டியிடம் விசாரணை நடந்தது. அப்போது, முக்கிய பிரமுகரின் பெயரை குறிப்பிட்டு, 'எல்லாம் அவருக்கு தெரியும்' என, பாண்டி தெரிவித்ததாக, போலீசார் கூறினர். அதேநேரத்தில், பாண்டியிடம் வாக்குமூலம் பெறவில்லை எனவும், போலீசார் கூறினர். 'முக்கிய பிரமுகர்' யார் என்ற தகவலை, போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால், 'பொட்டு' சுரேஷ் கொலையில், அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது என, போலீசார் கூறுகின்றனர்.
மும்பையில் யார் ஆதரவு?
 
மும்பையில், இரண்டரை ஆண்டுகளாக பதுங்கியிருந்த, 'அட்டாக்' பாண்டி, தன்னை தேடி போலீசார் வருகின்றனரா என, மதுரையில் உள்ள ஆதரவாளர்கள் மூலம் கண்காணித்து உள்ளார்.மதுரை தனிப்படை போலீசார், இருநாட்கள் வெளியூர் சென்றாலே, 'அண்ணனை பிடிக்கத்தான் போயிருப்பரோ' என, உஷாராகி, எச்சரித்து வந்துள்ளனர். இதனாலேயே, போலீஸ் பிடியில் சிக்காமல், பாண்டி தப்பித்து வந்துள்ளார்.இதையறிந்த பின்தான், சென்னை போலீசார் மூலம் காய் நகர்த்தி, மதுரை போலீசார், பாண்டியை கைது செய்துள்ளனர். மும்பையில், யார் ஆதரவில் இருந்தார் என்ற தகவலையும் சேகரித்து வருகின்றனர்.
நிருபர்களுக்கு 'டிமிக்கி!'
 
'அட்டாக்' பாண்டி எந்த இடத்திற்கு அழைத்து வரப்படுகிறார் என்பதை, போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர். வெவ்வேறு இடங்களை தெரிவித்து, போக்கு காட்டியதால், நிருபர்கள் அலைய நேரிட்டது. பின், யாருக்கும் தெரியாமல், எஸ்.ஐ.சி., அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்....
 
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த 'பொட்டு' சுரேஷ், மதுரையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 'அட்டாக்' பாண்டியை ஆஜர்படுத்தக் கோரி,
அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை வில்லாபுரம் தயாளு தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் 2011 ல் எனது கணவர் 'அட்டாக்' பாண்டியை, 38,
என்கவுன்டரில்' கொலை செய்ய போலீசார் முயன்றனர். அதிலிருந்து கணவர் தலைமறைவானார்.'பொட்டு' சுரேஷ் 2013 ஜன., 31ல் கொலை செய்யப்பட்டார். அரசியல் உள்நோக்கில் எனது கணவர் பெயரை இவ்வழக்கில் சேர்த்துள்ளனர். மேலும் சில அரசியல் தலைவர்களின் பெயர்களை வழக்கில் சேர்க்க, கணவரை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற முயற்சிக்கின்றனர். மறுக்கும்
பட்சத்தில் கணவரை போலி 'என் கவுன்டரில்' கொல்ல திட்டமிட்டுள்ளனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.கணவருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனு செய்திருந்தார்.நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி கொண்ட அமர்வு விசாரித்தது.மனுதாரர் வழக்கறிஞர்: மனுதாரரின் கணவரை சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். ஒப்புதல் வாக்குமூலம் பெற, விசாரணை என்ற பெயரில்
துன்புறுத்துகின்றனர்.அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் துரைப்பாண்டியன்: மனுதாரரின் கணவரை நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு, மகாராஷ்டிரா நவி மும்பை பகுதியில் போலீசார் கைது செய்தனர். அவரை கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சம்பந்தப்பட்ட மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அனுமதி பெற்றுள்ளனர். அவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தவில்லை. விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துவர். இதை பதிவு செய்த நீதிபதிகள், 'மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு
எவ்வித ஆதாரமும் இல்லை. மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்...
 
மதுரையில் தி.மு.க., பிரமுகர் 'பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில் கைதான 'அட்டாக்' பாண்டியை, 15 நாட்கள் 'ரிமாண்ட்' செய்து விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பையில் கைதான 'அட்டாக்' பாண்டியை, மதுரை போலீசார் நேற்று மாலை ௫:௩௫ மணிக்கு மாவட்ட விரைவு ௨வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது மனைவி தயாளு உட்பட உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவரது அம்மா ராமுத்தாய் அழுததை பார்த்த பாண்டி, 'ஆத்தாவ அழச்சொல்லாத' என மனைவியிடம் கூறினார்.
பின், விசாரணை நடத்திய நீதிபதி பாரதிராஜா, அக்., ௬ வரை 'ரிமாண்ட்' செய்து உத்தரவிட்டார். பாண்டி தரப்பில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண ராஜூ ஆஜரானார்.
இதற்கிடையில், பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர். இதுதொடர்பாக இன்று (செப்., ௨௩) பாண்டியை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இரவு 8 மணிக்கு, மதுரை சிறைக்கு பாண்டி அழைத்து வரப்பட்டார். பாதுகாப்பு கருதி, உடனடியாக அவர் நெல்லை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment