Saturday, December 6, 2014

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு ஜனாதிபதி மஹிந்தவே பொருத்தமானவர்: மசூர் மெளலானா!

Saturday, December 06, 2014
இலங்கை::முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு பொருத்தமான தலைவரென்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கவுள்ளதாக இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் இணைத் தலைவர் அப்துல் காதர் மசூர் மெளலானா தெரிவித்தார்.
 
இந்தத் தேர்தலில் முஸ்லிம் களின் பங்களிப்பு எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்:-
 
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் தெரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவுக்கே, முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டில் சிறுபான்மையிலும் சிறுபான்மை சமூகமாக இருக்கின்றோம்.
சுமார் 2500 ஆண்டுகால வரலாற்றை கொண்ட நாம் கடந்த காலங்களில் ஆட்சியில் பல தலைவர்களை சந்தித்துள் ளோம். அவர்களை ஆதரித்து அவர்களை வெற்றி பெறவைக்கவும் உதவியுள்ளோம்.
 
இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக் கும் நாட்டுத்தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கின்றோம். இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்.
 
இன்று அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படும் பரபரப்பான கேள்வி இதுவே. இந்தத் தேர்தலில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் அவதானத்துடனும் கவனமாகவும் வாக்குகளை பிரயோகிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். கண்மூடித்தனமாக, எழுந்தமான முறையில் பொறுப்பில்லாமல் கேட்பார் பேச்சை கேட்டு நமது வாக்குகளை பிரயோகித்தால் அது நமக்கும் சமூகத்திற்கும் செய்யும் பாரிய துரோகமாகிவிடும். “கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பி விடக்கூடாது”
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் நமது சமூகத்திற்கு கிடைத்த நன்மைகளை, கெளரவங்களை நாம் மனசாட்சியுடன் நெஞ்சை தொட்டு எண்ணிப் பார்க்க வேண்டும். புலிகளினால் 24 மணி நேர காலக்கெடுவுக்குள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப வழி வகுத்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.
 
புலிகளின் கோர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து வடக்கு கிழக்கில் சமாதானத்தை நிலைநாட்டி நாடு முழுவதும் அமைதியான நிலையை தோற்றுவித்த பெருமை அவரையே சாரும். இனங்களுக்கு இடையே நல்லுறவையும் சகோதரத்துவத் தையும் செளஜன்யத்தையும் உருவாக்க அல்லும் பகலும் பாடுபட்ட தலைவர் அவர், பாரிய கலவரங்களை தடுத்து அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களையும் உடமைகளையும் அழிவில் இருந்து பாதுகாத்தது யார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
 
வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலுமான முங்லிம்களுக்கு தொழில்களை வழங்கி அவர்கள் வாழும் பிரதேசத்தில் அபிவிருத்தியை மேம்படச் செய்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இது நமது மனச்சாட்சி சொல்லுகின்ற விடயம் நன்றியுடைய சமுதாயமென மார்பு தட்டும் நாம் எதிர்க்கட்சிகளின் மாய வலைக்குள் சிக்கி எதிரணியினருக்கு வாக்குப் போடுவது எந்த வகையில் நியாயமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரதிர்ஷ்டியான தலைமைத்துவத்தை மீண்டும் ஏற்பதற்கு முஸ்லிம்கள் இன்று திடசங்கற்பம் பூண்டுவிட்டனர். எதிர்க்கட்சியினர் பொய்யான பிரசாரங்களை கட்டவிழ்த்து முஸ்லிம்களை திசை திருப்ப முயல்கின்றனர். இவர்களின் பம்மாத்து அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் எடுபடாது. இனமத பிரதேச வேறுபாடுகளுடன் பிரிந்து கிடந்த நமது இலங்கையை ஒற்றுமைப்படுத்தி ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளே சேறுபூசி வருகின்றன. அவரது திறமை சாணக்கியம் துணிவு கண்டு கதிகலங்கி நிற்கின்றனர்.
 
வெளிநாட்டு சக்திகளின் சதி வலையில் சிக்குண்ட சில அடிப்படைவாதிகள் ஜனாதிபதி மீது சேறு பூசுவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சூழ்ச்சியினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிரு க்கலாம். எவ்வாறாயினும் உதிரணியின் பொது வேட்பாளரை எமது ஜனாதிபதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது முஸ்லிம்களு டைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கக்கூடிய ஒரெயோரு தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். முஸ்லிம்கள் இவ்வாறான வெளிநாட்டு சக்திகளின் சதிவலையில் இருந்து பாதுகாப்பு பெறவேண்டுமானால் எமது ஒரேயொரு தெரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியே….
 
தற்போது முஸ்லிம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொது எதிரணி வேட்பாளர் உண்மையாக முஸ்லிம்கள் மீது அன்பு கொண்டிருந்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட வேளையில் ஏன் குரல் கொடுக்கத் தவறிவிட்டார்? எனவே முஸ்லிம்களாகிய நாம் இத்தருணத்தில் நன்கு சிந்தித்து சமயோசிதமான முறையில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்.
 
எதிர்வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி இந்நாட்டிலே ஜனாதிபதியாக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை எமது அமைப்பு ஆணித்தரமாகக் கூறுகின்றது. எனவே முஸ்லிம்கள் இந்த வெற்றியின் பங்காளிகளாக மாறவேண்டு மெனவும் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment