Friday, December 19, 2014

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோருகின்றோம்: த.தே.ம.முன்னணி!

Friday, December 19, 2014      
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது.

மைத்திரியை எடுத்துக் கொண்டால், அவருக்கு முன்பாக ரணில் என்னும் சமாதான முகமும், தமிழருக்கு சார்பானவர் என்ற முகமூடியும் போடப்படுகின்றது.

ஆனால் அவருடன் அருகில் இருப்பது ரணில் போன்று காட்டப்பட்டாலும் உண்மையில் அவருக்குப் பக்கபலமாக உள்ளவர்கள், இனவாதகச் கட்சிகளான ஹெலஉறுமய, ஜேவிபி மற்றும் சந்திரிகா.

இந்த சந்திரிகா ஆட்சியில் நடந்தது என்ன – சமாதான தேவதையாக தன்னைக்காட்டி வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்கு சமஸ்டித் தீர்வு கொடுப்பேன் என்று கூறி 62 வீதமான வாக்குகள் பெற்று ஆட்சிப்பீடமேறியவர்.

பின்னர் சமாதானத்திற்கான யுத்தம் நடாத்தி 5 லட்சம் மக்களை குடாநாட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வைத்தவர். சத்ஜெய இராணுவ நடவடிக்கை, எடிபல இராணுவ நடவடிக்கை, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை உள்ளிட்ட தீவிரமான போர் நடவடிக்கைகளை நடாத்தியவர்.

பல்லாயிரம் பேரை செம்மணியில் கொன்று புதைத்தவர். நவாலி தேவாலயம், மடு தேவாலயப் படுகொலைகள் உள்ளிட்ட பெருமளவு படுகொலைகளை அரங்கேற்றியவர்.

ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபை முன்வைத்தபோது ரணிலிடமிருந்த முக்கிய மூன்று அமைச்சுக்களைப் பறித்து சமாதான சூழலை குழப்பியவர்.

இந்த மைத்திரிபால அன்று வாகரையிலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது யுத்தத்தை நடாத்தியவர். சர்வதேச ரீதியில் போரையும்  நியாயப்படுத்தியவர்.

இன்று தெளிவாகக் கூறியிருக்கின்றார், . சமஸ்டித்தீர்வு கொடேன் ஒற்றையாட்சியை பேணிப்பாதுகாப்பேன். பௌத்தத்திற்கு அரசியலமைப்பி லுள்ளவாறு முன்னுரிமை, என்று இனவாதக் கட்சிகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளார்.

இந்நிலையில் போட்டியிடும் மைத்திரிபால பிரதான வேட்பாளர்களில் எவருக்கேனும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்குவதானது எதிர்காலத்தில் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்போகும் அழிப்பை தமிழர்களே சரி என்று ஏற்றுக் கொள்வதாகவே அமையும்.

இந்தத் தேர்தல் வெறுமனே இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் போன்ற ஒன்றைத் தோற்றப்பாடு மட்டுமே காட்டப்படுகின்றது.

ஆனாலும் இந்தத் தேர்தலின் பின்னால் சர்வதேச வல்லாதிக்க சக்திகள் தமது நலன்களைப் பேணக்கூடிய ஒருவரை ஆட்சிக் கொண்டுவந்து விட வேண்டும் என்பதிலும் போட்டியிட்டுக் கொண்டுள்ளனர் என்பதனையும் எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக சீன சார்பு நாடுகள் ஓர் அணியாகவும், இந்திய மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஓரணியாகவும் திரண்டுள்ளன. அந்த சக்திகள் தமது நலன் பேணும் தலைமையை ஆட்சியிலமர்த்தும் போட்டியில் நாம் வெறும் கருவிகளாக மட்டும் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் தராதது மட்டுமல்ல நிச்சயமாகத் தீமையை உண்டு பண்ணாது என்ற உத்தரவாதம் கூட இல்லா நிலையில் நடைபெறப் போகும் இந்தத் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களைக் கோருகின்றது.

அரசியல் ரீதியாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள் என்ற செய்தியையும் சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக உணர்த்த இதனை நல்லதொரு சந்தர்ப்பமாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினையை தீர்க்காது இந்தத் தீவில் ஓர் ஆட்சியை உண்டு பண்ணுவதும் தமது நலன்களை அடைந்து கொள்வதும் சாத்தியமில்லை என்பதனையும் சர்வதேச சமூகத்திற்கு நாம் தெளிவாக உணர்த்த வேண்டும்.

இதனைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு தங்களது அரசியல் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோருகின்றோம்.

No comments:

Post a Comment