Wednesday, December 03, 2014
இலங்கை::புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் உள்ளிட்டோர், புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் பணிப்பிற்கமைய ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு இன்ஸ்பெக்டர் ஜயரட்ணம் மற்றும் இராணுவ கப்டன் ஒருவர் உட்பட 80 பேர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள சமணங்குளம் காட்டுப் பகுதியில் புலிகளினால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக, பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் விசாரணையில் முன்னாள் புலிபோராளிகள் 4பேர் சாட்சியம் வழங்கியிருக்கின்றனர்.
குறித்த வழக்கு தற்போது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 19ம், 20ம் திகதிகளில் நீதவான் நீதிமன்றம் நடத்திய விசாரணையின் பின்னர், குறித்த பகுதியை மேலதிக ஆய்விற்குட்படுத்துமாறு நீதிமன்றம் பணித்திருந்தது. இதற்கமைய குறித்த பகுதியை நேற்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து 9 அமைப்புக்களை சேர்ந்த 25பேர் ஆய்வு செய்துள்ளனர்.
நேற்றுக்காலை 9 மணி தொடக்கம் மாலை 3மணி வரையில் மேற்படி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது முன்னாள் போராளிகள் அடையாளப்படுத்திய பகுதியில் உள்ள மண்ணில் டீசல் கலந்திருப்பதும், அந்த இடத்தில் எரியூட்டப்பட்டதற்கான சான்றுகள் மற்றும், மண் மாதிரிகள், ஆகியவற்றை தாம் மீட்டிருப்பதாக ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மாதிரிகள் மேலதிக ஆய்விற்குட்படுத்தப்பட்டே முடிவு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்ந்து 5 தினங்களுக்கு நடத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment