Sunday, November 30, 2014

தீவிரவாதத்தை தடுக்க ‘ஸ்மார்ட்’ போலீஸ் திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி!


Sunday, November 30, 2014
கவுகாத்தி::நாட்டில் தீவிரவாதத்தை தடுக்க ‘ஸ்மார்ட்Õ போலீஸ் திட்டம் அவசியம் என டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அல்கய்தா தீவிரவாதிகள் அச்சுறுத்தல், ஐஎஸ் அமைப்பில் இந்திய வாலிபர்கள் இணைந்த விவகாரம், மேற்கு வங்க மாநிலம் பர்தவானில் நடந்த குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்த போலீஸ் டிஜிபிகளின் 2 நாள் மாநாடு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 மாநாட்டில் நேற்று ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘இந்தியாவில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் பாகிஸ்தான் அரசுதான் காரணம். இந்தியாவின் ஸ்திரத் தன்மையை குலைப்பதற்காக பாகிஸ்தான் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஈராக், சிரியாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பினரால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்படுவது கவலைக்குரிய விஷயமாகும். இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்களை ஈர்த்தால் இஸ்லாமியதேசத்தை உருவாக்க முடியும் என அல்கய்தா, ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் கருதுகின்றன. எனவே சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்திய இளைஞர்களை குறிவைக்கின்றன. ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தேசத்திற்காக தியாகம் செய்ய தயங்காதவர்கள். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து தங்களது தேசப்பற்றையும், தியாகத்தையும், நாட்டின் பாதுகாப்புக்காக போராட தயங்காதவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளனர். இந்தியாவுக்குள் எந்தவித தீவிரவாத இயக்கமும் பாதிப்பை ஏற்படுத்த முடியாதுÕ என்றார்.
 
அதே போல் உளவுத்துறை தலைவர் ஆசிப் இப்ராகிம் பேசுகையில், ‘லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, இந்தியன் முஜாகிதீன் போன்றவை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஐஎஸ் அமைப்புகளிடம் இருந்து திரும்பி வரும் இளைஞர்களிடம் அவர்களின் உண்மையான நோக்கம் பற்றி விசாரிக்க வேண்டும்Õ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிஜிபி மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு பாதுகாப்பு குறித்து உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது: இந்த மாநாட்டை டெல்லிக்கு வெளியில் நடத்த வேண்டிய அவசியம் என்ன என சிலர் கேட்கின்றனர். வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் உங்களது முழு கவனமும் மாநாட்டின் மீது குவிய வேண்டும் என்பதற்காகத் தான் இங்கு நடத்தப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய நாளில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களை நான் பாராட்டுகிறேன்.இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை 33 ஆயிரம் போலீசார் பணியில் இருந்த போது உயிரிழந்துள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
 
 தேசத்தின் பாதுகாப்புக்கு புத்திசாலித்தனமான ஒரு நிர்வாகம் தேவையாக உள்ளது. எந்திரத்தனமான வேலையில் இருந்து போலீசார் விடுவிக்கப்பட வேண்டும். தங்களது பணியின் போது காவல் துறையினர் உயிருக்கு அச்சுறுத்தலான சூழலில் பணியாற்ற வேண்டியது உள்ளது. எனவே காவல் துறையினரின் குடும்பத்தினருக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் தேவையான கல்வி உள்ளிட்ட நலத் திட்டங்களை தர வேண்டியது நமது கடமை. காவல் நிலையங்களுக்கு என தனி வெப்சைட் இருந்தால் அவற்றில் ஒவ்வொரு வாரமும் அங்கு சிறப்பாக நடைபெறும் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க இயலும். காவல் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்கி அதனை மேம்படுத்த வேண்டும். காவல் துறையை, ஸ்மார்ட் போலீசாக மாற்றுவது அவசியம். ஸ்மார்ட் என்பதில் எஸ் என்பது ஸ்டிரிக்ட் (கண்டிப்பு) மற்றும் சென்ஸ்சிடிவ் (கூருணர்வு), எம் என்பது மாடர்ன் (நவீனம்) மற்றும் மொபிலிட்டி (செயல்பாட்டு தன்மை), ஏ என்பது அலர்ட் (உஷார்) மற்றும் அவுக்கவுன்டபிள் (துல்லியம்), ஆர் என்பது ரெஸ்பான்சிவ் (பொறுப்பு) மற்றும் ரிலயபிள் (நம்பக தன்மை), டி என்பது டெக்சவ்வி (தொழில்நுட்ப மேம்பாட்டு திறன்) மற்றும் டிரெய்ன்டு (பயிற்சி) ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

No comments:

Post a Comment