Tuesday, December 2, 2014

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தகர்க்க ஐ.எஸ்.ஐ. திட்டம்!

Tuesday, December 02, 2014
சென்னை::சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூர் இஸ்ரேல் துணைத்தூதரகம் ஆகியவற்றை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டது. இது தொடர்பான உளவுத்தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தாக்குதல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது ஆனார். அவர் மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. விசாரித்தது. பூந்தமல்லி தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின்போது, ஜாகீர் உசேன் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோனி, கடந்த 28-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பில், அமெரிக்க தூதரகத்தை தாக்கி தகர்க்க தீவிரவாதிகள் எப்படியெல்லாம் சதித்திட்டம் தீட்டி உள்ளனர் என்பதை ஜாகீர் உசேன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். இது தொடர்பாக தீர்ப்பில் வெளியாகி உள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* சென்னையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்த அமெரிக்க துணை தூதரகத்துக்கு அவர்கள் சூட்டிய சங்கேத பெயர் ‘திருமண மண்டபம்’. இந்த தாக்குதலுக்கு அமர்த்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு வைத்த புனைப்பெயர் ‘சமையல்காரர்கள்’. தாக்குதலுக்கு பயன்படுத்துகிற வெடி உபகரணங்களுக்கு சூட்டப்பட்ட பெயர் ‘மசாலா’.* இந்த தாக்குதல் திட்டத்தில் இலங்கை தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த பாகிஸ்தானை சேர்ந்த அமிர் ஜூபைர் சித்திக்கிற்கு முக்கிய பங்கு உண்டு. இதுகுறித்த தகவல்கள் வெளியானதும், அவரை இலங்கையிலிருந்து பாகிஸ்தான் திரும்ப அழைத்துக்கொண்டது.*

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் தான் சந்தித்த 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள், இலங்கையில் தான் சந்தித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பற்றி தனது வாக்குமூலத்தில் ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார்.* இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய அமிர் ஜூபைர் சித்திக்கின் உயர் அதிகாரியான பாகிஸ்தான் அதிகாரி ஒருவர்தான், சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் தாக்குதல் நடத்தும்படி ஜாகீர் உசேனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த தகவல்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இப்போது ஜாகீர் உசேன் வாக்குமூலத்தில் கூறியதாக தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இலங்கையில் அவர் சந்தித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமையினர் முடிவு செய்துள்ளனர்.இதற்காக அவர்கள் விரைவில் இலங்கைக்கு செல்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment