Wednesday, November 19, 2014

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் இன்னும் ஓரிரு நாட்களில் விடுதலை: செந்தில் தொண்டைமான்!

Wednesday, November 19, 2014
ராமேசுவரம்::தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் இன்னும் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை மந்திரி செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
 
இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தமிழகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கண்டித்தும், 5 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன.
 
இதையடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் மீனவர் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது நடந்த ஆலோசனையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை தமிழக சிறைக்கு மாற்ற ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
 
மீனவர் விவகாரம் தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டை மான், பிரபா கணேஷ் ஆகியோர் ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேசினர். அவர்கள் தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினர். அதற்கு 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்தும், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதாக ராஜபக்சே கூறியதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
 
பொதுமன்னிப்பு வழங்கும்பட்சத்தில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை வாபஸ் பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசும், இலங்கை அரசும் எந்த விதமான தகவல்களை தெரிவிக்கவில்லை.
 
மீனவர்கள் விடுதலை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் 15 பேர் நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர்.
 
இதற்கிடையில் மத்திய அரசு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திடீரென வாபஸ் பெற்றது. இதையடுத்து மீனவர்களின் விடுதலை உறுதி செய்யபட்டதாக கூறப்பட்டது.
 
இதுகுறித்து இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் மோகன சமர நாயகே கூறுகையில், இந்திய அரசு இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வாபஸ் வாங்கியது குறித்த முறையான தகவல் இன்று எங்களுக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மீனவர்களின் விடுதலை குறித்து அதிபர் ராஜபக்சே இன்னும் 2 நாட்களில் தனது முடிவை அறிவிப்பார் என்றார்.
 
இதற்கிடையில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் மீண்டும் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
 
தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலை குறித்து அதிபர் ராஜபக்சேவிடம் பேசினேன். அதற்கு அவர் 5 மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment