Monday, November 17, 2014

5 மீனவர்கள் விடுதலை விவகாரம்: மீனவ சங்க பிரதிநிதிகள் டெல்லி பயணம்!

Monday, November 17, 2014
ராமேசுவரம்::ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், பிரசாந்த், லாங்லெட், எமர்சன். வில்சன் ஆகிய 5 மீனவர்கள் போதை பொருட்களை கடத்தியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
 
கொழும்பு நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய–மாநில அரசை பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மீனவ சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
 
இந்த நிலையில் மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ராஜபக்சே, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை தமிழக சிறைக்கு மாற்ற ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.
 
மேலும் இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், பிரபா கணேஷ் ஆகியோர் ராஜபக்சேவை சந்தித்து தமிழக மீனவர்களின் விவகாரம் குறித்து பேசியதாக தெரிகிறது.
 
அப்போது 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என ராஜபக்சே தெரிவித்தாக அமைச்சர்கள் கூறினர். ஆனால் இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இலங்கை அரசோ, மத்திய அரசோ எந்தவிதமான தகவல்களையும் தெரிவிக்கவில்லை.
 
இதனால் 5 மீனவர்களின் விடுதலை குறித்து குழப்பமான சூழ்நிலையே ஏற்பட்டு வருகிறது. மீனவர்கள் விடுதலையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இதனிடையே மீனவர்களின் விடுதலையை உறுதிப்படுத்த கோரியும், மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம், காரைக்காலை சேர்ந்த 15 மீனவ சங்க பிரதிநிதிகள், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
 
இதற்காக ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசு, தேவதாஸ், ஜெகதாபட்டிணம் விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் குட்டியாண்டி, முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட 15 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.

No comments:

Post a Comment