Thursday, October 2, 2014

ஜெயலலிதா இலங்கைக்குள் பிரிவினை வாதத்தினை தூண்டி வடக்குடன் கைகோர்க்கும் முயற்சிகள் இனிமேல் பலிக்கப்போவதில்லை: குணதாச அமரசேகர!

Thursday, October 02, 2014
இலங்கை::இலங்கைக்குள் பிரிவினை வாதத்தினை தூண்டி வடக்குடன் கைகோர்க்கும் முயற்சிகள் இனிமேல் பலிக்கப்போவதில்லை. ஜெயலலிதாவின் கைது இலங்கைக்கு நன்மையளிக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இலங்கைக்குள் பௌத்த சின்னங்களை அழித்து மேற்கத்தேய கொள்கைகளை பரப்ப நினைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப்போல் இஸ்லாமிய செயற்பாடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெயலலிதா கைது செய்யப்பட்டமை தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பிலும் இலங்கைக்குள் சிறுபான்மை இனத்தின் மீதான செயற்பாடுகள் கட்டுப்பட வேண்டும் எனவும் பிரிவினைவாத அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்ற நிலையில் அது தொடர்பிலும் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

இந்திய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி தமிழக முன்னாள் முதல்வர் செயற்பட்டமையும் இலங்கையில் வடக்குடன் கைகோர்த்து இலங்கைக்குள் பிரிவினை வாதத்தினை தூண்டியமைக்கும் இந்திய நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அதற்கும் அப்பால் இனவாத தமிழ் பிரிவினைவாத செயற்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிட வேண்டும். எனவே, தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்த வரையில் நன்மையாகவே அமையும்.

அதேபோல் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தனது செயற்பாடுகளையும் இந்தியாவுடன் கைகோர்த்து வடக்கில் தனி கட்சியமைக்கும் செயற்பாடுகளையும் இனிமேல் மேற்கொள்ள முடியாது. இதுவும் அரசாங்கத்திற்கு சாதகமான விடயமாகவே அமைந்துள்ளது.

மேலும் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் மற்றும் இலங்கையின் தேசியத்தினை அழிக்கும் செயற்பாடுகளை மேற்கத்தேய மற்றும் புலம்பெயர் சக்திகள் மேற்கொள்ளப்படுகின்றமைக்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறு தடைகளை விதிக்கின்றதோ அதேபோல் பௌத்த சிங்கள கொள்கைகளையும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ உரிமைகளையும் அழிப்பதற்கு மத்திய கிழக்கின் முஸ்லிம் தீவிரவாத சக்திகள் முயற்சிக்கின்றது. இதற்கும் இலங்கை மக்களும் அரசாங்கமும் இடம்கொடுக்கக் கூடாது. எனவே, இலங்கையினை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் நாட்டில் ஆட்சியினையும் அரசியல் தன்மைகளையும் தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே தவிர மதவாத அமைப்புகள் அல்ல. எனவே மதத்தினையும் அங்கீகாரத்தினையும் பயன்படுத்தி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment