புலி உறுமுது... புலி உறுமுது... இடி இடிக்குது இடி இடிக்குது வேட்டைக்காரன் வரவைப் பார்த்து...
- வேட்டைக்காரன் பாடல் பின்னணியில் ஒலிக்க செந்தமிழன் சீமான் கம்பீரமாக உலவிக் கொண்டிருந்த 2010-11 காலகட்டம்.
ஈழத்துடன் சேர்த்து தனித்தமிழ் நாட்டையும் கொசுறாக கச்சத்தீவையும்
வென்றெடுப்பார் என்ற நம்பிக்கையில் செந்தமிழனின் கூடாரம் வீங்கிக்
கொண்டிருந்தது.
புலி சீமானும் தொண்டை அடைக்க குமுறி, நரம்பு புடைக்க சவால்விட்டு, முஷ்டி மடக்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போர் பிரகடனம் செய்தார்.
புலி சீமானின் பெயரைச் சொன்னால் எதையும் விற்றுவிடலாம் என்ற நுகர்வுசார் விழிப்புணர்வு பெற்ற பலர்களில் மூவி பஸார் நிறுவனமும் ஒன்று.

அதுவரை கெஸ்ட்ரோல், வேஸ்ட்ரோல் என்று துக்கடா வேடங்களில் நடித்த சீமானை
ஹீரோவாக்கி கண்டுபிடி கண்டுபிடி என்ற படத்தை மூவி பசார் தயாரித்தது. ஒரே
மாதத்தில் 90 லட்சங்களில் மொத்த படத்தையும் முடித்து பல கோடி கனவுகளுடன்
சென்னை திரும்பினர். படத்தின் போஸ்டர்களில் செந்தமிழன் சீமான் நடிக்கும்
கண்டுபிடி கண்டுபிடி என்ற வார்த்தைகள் டாலடித்தன.
இந்த ஹீரோ விஷயமும் ஒரு காற்றடித்த பலூன்தான். படத்தில் போலீஸ் அதிகாரியாக
வரும் சீமானின் போர்ஷன் மிகக் கொஞ்சம். பத்தேநாள்தான் கால்ஷீட். அதில்
பாதி நாள் கறிசோறு செய்கிறேன் என்று படப்பிடிப்பு நடந்த உத்தமபாளையம்,
கம்பம் பகுதியின் ஆடு, கோழிகளை கணிசமாக காலிசெய்துவிட்டார். இந்த பத்துநாள்
கால்ஷீட்டுக்கு கறிசோறு செலவு தவிர்த்து பத்து லட்சம் சீமானுக்கு
தரப்பட்டது.

படத்தை முடித்த வேகத்தில் சந்தைக்கு கொண்டு வந்திருந்தால் மூவி பஸாருக்கு
ஒரு கோடி வரை லாபம் கிடைத்திருக்கும். போஸ்ட்புரெடக்சன், போஸ்டர் செலவு
உள்பட ஒன்றரை கோடி செலவளித்தவர்களுக்கு ஒருகோடி பெரிசுதானே. 21-ம்
நூற்றாண்டின் புரட்சியாளரை வைத்து படமெடுத்துவிட்டு நாலைந்து கோடியாவது
லாபம் பார்க்காவிட்டால் எப்படி என்று படம் தயாரித்தவர்கள் ஐந்து ஆறு என்று
கோடிகளை ஏற்றிச் சொல்ல, இன்னொருபுறம், பேக்ரவுண்ட் பாடலை மாற்றி அம்மா
என்றழைக்காத உயிரில்லையே என பரப்புரையை ஆரம்பித்திருந்தார் சீமான்.

புலி என்னடா புல்லுகட்டுப் பக்கம் போகுது என்று சீமான் ஹேங்ஓவரிலிருந்து
ஒவ்வொருவராக விழித்தெழ ஆரம்பித்தனர். அதற்குள் தமிழ் சினிமாவின் அத்தனை
விநியோகஸ்தர்களும் கண்டுபிடி கண்டுபிடி படத்தை பார்த்திருந்தனர்.
பார்க்காமலிருந்தாலாவது சுமாரான ரேட்டுக்கு படத்தை தள்ளி விட்டிருக்கலாம்.
பார்த்த பிறகு ஐம்பது லட்சத்துக்கு கேட்க ஆளில்லை.
அப்படி 2011-ல் எடுத்து 2012-ல் பாடல்கள் வெளியிடப்பட்ட கண்டுபிடி கண்டுபிடி படத்தை 2014-ல் ஜூலையில் வெளியிடுகிறார்களாம்.

புலி சீமான் ஹேங்ஓவர் சுத்தமாக நீங்கிய நிலையில் அவரின் படத்தையோ, பெயரையோ
போஸ்டரில் போடும் தில் தயாரிப்பாளருக்கு இல்லை. சீமானின் படத்தையும்,
பெயரையும் அப்படியே வழித்தெடுத்து நாலு சின்னப் பசங்களின் படத்தைப் போட்டு
போஸ்டரடித்திருக்கிறார்கள். பழைய சீமான் படமா இது என்று யாருக்கும் துளி
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக படப்பெயரின் டிஸைன், தயாரிப்பு
நிறுவனத்தின் பெயரின் டிஸைன் என்று சகலமும் மாற்றப்பட்டிருக்கிறது. அட இது
பரவாயில்லை. படத்தை இயக்கிய ராம்சுப்பாராமன் தனது பெயரை ராம்குமார்
என்றும், தயாரிப்பாளர் கல்கி, கல்கியுவா என்றும் பெயர்
மாறியிருக்கிறார்கள்.
புலி செந்தமிழன் சூறாவளி பெயருடன் யார் யாரின் கோவணத்தையெல்லாம் உருவியதோ.

No comments:
Post a Comment