Tuesday, April 29, 2014

விக்னேஸ்வரன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனராக இருப்பதால் பிரிவினைவாதத்திற்கான கதவுகளை திறந்துவிட முடியாது: வசந்த பண்டார!

Tuesday, April 29, 2014
இலங்கை::
வட மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கினால் அது நாட்டின் பிரிவினைவாதத்திற்கே உந்துசக்தியாக அமையும். எனவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனராக இருப்பதால் பிரிவினைவாதத்திற்கான கதவுகளை திறந்துவிட முடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்  தெரிவித்தது.

இதுதொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்இ இன்று நேற்றல்ல. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார என்றுமே இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு துணை போனவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது மைத்துனர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவி வகிப்பதால் வடமாகாண சபைக்கு அனைத்து அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் அதனை மறுப்பது தவறென்றும் சிங்கள அடிப்படைவாதிகளின் சிறைக்கைதியாக அரசாங்கம் சிக்கியிருப்பதாகவும் அமைச்சர் விமர்சிப்பதாக தெரிவித்தார்.

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதற்கு நாட்டு மக்கள் மத்தியில் விருப்பம் கிடையாது. இதனை மீறி செயற்பட முடியாது. அத்தோடு அதிகாரங்களை வழங்கினால் அது பிரிவினையை நோக்கியே முன்னகர்த்தப்படும். இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். நாம் அடிப்படைவாதிகள் அல்ல. தேசத்தை நேசிப்பவர்கள் என்பதை அமைச்சர் வாசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சராக பதவி வகித்துக்கொண்டு   இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதால் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமல்லாது புலம்பெயர் புலிகள் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்கும் இது ஊக்கமளிப்பதாக அமையும். அரச உயர்மட்டம் இது தொடர்பில் கவனம்  செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment