Tuesday, April 29, 2014

7வது கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் சோனியா, மோடி தொகுதிகளில் நாளை வாக்குபதிவு தொண்டர்கள் வீடு, வீடாக ஓட்டுவேட்டை !

Tuesday, April 29, 2014
புதுடெல்லி::நாடாளுமன்ற தேர்தலில் 7வது கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குபதிவு நடக்கிறது. பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வதோதரா, காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தொண்டர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டையாடி  வருகின்றனர்.    மக்களவையில் மொத்தம் உள்ள 543 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 7ம் தேதி  முதல் கட்ட தேர்தல் நடந்தது. 6வது கட்டமாக, தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 117 மக்களவை தொகுதிகளில் கடந்த 24ம் தேதி தேர்தல்  நடந்தது. இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 7வது கட்டமாக நாளை 7 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் வாக்குபதிவு நடக்கிறது. ஆந்திராவில் 17தொகுதிகள், குஜராத்தில் 26,  பஞ்சாபில் 13, உத்தரபிரதேசத்தில் 14, மேற்குவங்கத்தில் 9, பீகாரில் 7, காஷ்மீரில் 1 ஆகிய 7 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களான தாத்ரா நாகர் ஹவேலி,  டாமன் மற்றும் டையூ ஆகிய தொகுதிகளில் தலா 1 தொகுதிகளிலும் இந்த தேர்தல் நடக்கிறது. ஆந்திராவில் தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை  தொகுதிகளுடன், 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் மொத்தம் 1295 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 222 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள்.  அவர்களில் 139 பேர் கடுங்குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், வேட்பாளர்களில் 341 பேர் கோடீஸ்வரர்கள்.  மோடி,  சோனியா: குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதன்படி, குஜராத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் வதோதரா  தொகுதியிலும் வாக்குபதிவு நடக்கிறது. அதே போல், உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

இந்த 2 தொகுதிகளிலும் பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையாடி வருகின்றனர். மேலும், இத்தொகுதிகளில் மத்திய படையினர் மற்றும் உள்ளூர்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா(ஸ்ரீநகர் தொகுதி), பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங்(லக்னோ),   அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் அருண் ஜெட்லி(அமிர்தசரஸ்), முரளி மனோகர் ஜோஷி(கான்பூர்),  உமா பாரதி(ஜான்சி) ஆகியோர் போட்டியிடும்  தொகுதிகளிலும் நாளை வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு  வாக்குபதிவு தொடங்குகிறது.

No comments:

Post a Comment