Thursday, April 17, 2014

மலேசிய விமானத்தை தேடும் பணியில் முன்னேற்றமில்லை: தேடும் பணி விரைவில் நிறுத்தப்படும்: ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு!

Thursday, April 17, 2014
பெர்த்::மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி விரைவில் நிறுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இன்று தெரிவித்துள்ளார்.
 
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி மாயமானது. அதில் பயணம் செய்த விமானிகள் மற்றும் பயணிகள் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டு வருகிறது. இந்த மீட்பு பணியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விமானப் படை தளபதியான ஆங்கஸ் ஹூஸ்டன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.
 
தற்பொழுது விமானத்தை தேடுவதற்காக புளூஃபின்-21 நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு தேடுதல் பணிக்கு அனுப்பப்பட்ட இந்த வாகனம், 6 மணிநேரம் கடலுக்கு உள்ளே சென்று தேடுதலில் ஈடுபட்டது. எனினும் தேடுதலுக்கு பின்னர் அது சேகரித்த தகவலில் எதுவும் கிடைக்கவில்லை.
 
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முன்னேற்றம் எதுவும் கிடைக்காததால் விரைவில் அது நிறுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இன்று தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் விமானத்தின் சிதைவு பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், புளூஃபின்-21 நீர்மூழ்கி சென்று தேடிய பின்னரும் அதில் இருந்து தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
 
கடந்த திங்கட்கிழமை நடத்திய தேடுதல் பணி தோல்வியில் முடிந்தது. அதன் பின்பு பருவநிலை சாதகமான பின்னர், மீண்டும் செவ்வாய்க்கிழமை தேடுதல் பணி நடைபெற்றது. இவ்விரு பணிகளிலும் தகவல் கிடைக்காததை அடுத்து தேடுதலை நிறுத்தி விட முடிவு செய்துள்ளதாக அபாட் தெரிவித்துள்ளார். மேலும், பசிபிக் பெருங்கடலில் புளூஃபின்-21 நீர்மூழ்கி கொண்டு தேடுதல் பணியில் ஈடுபட்ட ரிச்சர்டு கில்லெஸ்பி கூறுகையில், இயர்ஹார்ட் விமானம் கடலில் மூழ்கியபோது அதன் பாகங்களை தேடி கண்டுபிடிக்க புளூஃபின்-21 பயன்படுத்தப்பட்டது.
 
ஆனால் அது பயன் தரவில்லை. நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், போதுமான முறையில் நம்பகமான தகவலை புளூஃபின்-21 எங்களுக்கு தரவில்லை. இந்தியப் பெருங்கடலில் கண்டதைப் போன்று நாங்கள் நடத்திய தேடுதல் பணியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் எந்த பலனுமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தேடுதல் பணியில் நம்பிக்கையற்ற நிலை காணப்படுவதால், இம்முடிவை அபாட் எடுத்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment