Thursday, April 17, 2014

மலேசியாவில் நடைபெறும் பாதுகாப்பு சேவைகள் தொடர்பான ஆசிய கண்காட்சி: பிரதமர் அப்துல் ரஸாக்குடன் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு!

Thursday, April 17, 2014
இலங்கை::மலேசியாவில் நடைபெறும் பாதுகாப்பு சேவைகள் தொடர்பான ஆசிய கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டு பிரதமர் டத்தோ நஜீப் அப்துல் ரஸாக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மலேசியா, புத்ரஜயாவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு உட்பட இரு தரப்பு பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளருடனான இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மலேசியா வுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மற்றும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை அன்றைய தினம் இரவு மலேசிய பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சுல்கிப்ளி ஸின்னால் வழங்கிய இரவு விருந்துபசாரத்திலும் இலங்கை தூதுக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதன் போது, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை தளபதி ஜெனரல் வின்சன்ட் கே பூகுக்ஸ்ஸையும் சந்தித்துள்ளார்.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தல் என்ற தொனிப் பொருளில் மலேசியாவில் நான்கு நாட்கள் நடைபெறும் பாதுகாப்பு சேவைகள் தொடர்பான ஆசிய கண்காட்சி மற்றும் மாநாட்டில் அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அரசு சாராத செல்வாக்கு; உலக பாதுகாப்புத் தாக்கம் என்ற தொனிப் பொருளில் விசேட உரை நிகழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment