Wednesday, April 16, 2014

சர்வதேச விசாரணைகள் நாம் இடமளிக்கப் போவதில்லை: அமைச்சர் மஹிந்த சமரசிங்க!

Wednesday, April 16, 2014
இலங்கை::சர்வதேச விசாரணைகள் சுயாதீனமாக அமையாது. எனவே அவ்விசாரணைக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க மல்வத்த பீட மகாநாயக்க தேரரிடம் தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானம் குறித்து கண்டி மல்வத்த மகா நாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல அவர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு தேரரை சந்தித்த போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் அங்கு தெரிவிக்கையில்:-
சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்திற் கமைய இங்கு விசாரணை மேற்கொள்ளப் படுமானால் அது சுயாதீனமாக அமையாது அதில் எமக்கு நீதி நியாயம் கிட்டுமென எதிர்பார்க்க முடியாது அது ஒரு தலைப் பட்சமாகவே அமையும் என நாம் கருதுகின்றோம் எனவே அவர்களை இலங்கை வர நாம் அனுமதிக்கப் போவதில்லை.
நாம் அந்தப் பிரேரணையை நிராகரித்துள்ளோம். அம் மாநாட்டில் நமக்கு ஆதரவளித்த நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு சர்வதேச விசாரணைகள் அவசியமில்லை. உள்ளக விசாரணைகள் மூலம் தீர்வு காணலாம் என தெரிவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அமைச்சர் ஊடகவியலா ளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவுக்கு வந்து 4-5 வருடங்களில் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிவிட முடியாது சர்வதேச நாடுகள் சில இராணுவத்தை அகற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன. இது குறித்து நாம் சர்வதேசத்திற்கு தெரிவித்து வந்தோம். கடந்த இரண்டொரு தினங்களுக்கு முன் வவுனியா நெடுங்கேணியில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் சிலர் மீண்டும் செயற்பட முணைந்த நிலையில் கொல்லப்பட்டனர். இது மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்குவதை காட்டுகிறது.

இது குறித்து நாம் சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளோம். இவ்வாறான சம்பவங்கள் தலை தூக்குவதனால் இராணுவத்தை அகற்ற முடியாது என்பதை தெளிவுபடுத்த எமக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

No comments:

Post a Comment