Wednesday, April 16, 2014

கோபி’யுடன் தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பு? படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபிக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கினார்!

Wednesday, April 16, 2014
இலங்கை::வவுனியா நெடுங்கேணியில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட  புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று கூறப்படுகின்ற கோபி மற்றும் அப்பனுடன் ஒரு தமிழ் அரசியல்வாதிக்கு இருந்ததாகக் கூறப்படும் நெருங்கிய தொடர்பு குறித்து பாதுகாப்புப் படைத்தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இவ் விடயம் குறித்து விசாரணை நடத்தி வரும் உயர் மட்டப் பொலிஸ் அதிகாரி ஒருவர், மேற்படி புலிகளுக்கும், அந்தத் தமிழ் அரசியல்வாதிக்கும் இடையில் இடம்பெற்ற இரகசிய தொலைபேசித் தொடர்பு குறித்து இப்போது தெரியவந்துள்ளமை பற்றி குறிப்பிட்டிருப்பதாக ஆங்கில தினசரி ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
அதேசமயம், சத்தம் சந்தடியின்றி செயற்பட்டுவரும்  புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்காக மலேசியாவிலிருந்து ‘உண்டியல்’ மூலம் சுமார் 60 இலட்சம் ரூபாவைத் தருவித்துள்ள  புலிகளின் நிர்வாக மற்றும் நலன்புரிப் பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டளர் ஒருவரை ஊர்காவற்துறைப் பகுதியில் வைத்து கடந்த வார இறுதியில் விசேட பொலிஸ் அணி கைது செய்திருக்கின்றது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
இந்தச் சந்தேகநபர் வெவ்வேறு பெயர்களில் இரு பாஸ்போர்ட்களை வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த விசாரணைக்குப் பொறுப்பான அதிகாரி குறிப்பிட்டார். சந்தேகநபர் மலேசியாவில் பல வர்த்தக நடவடிக்கைகளில் நிதி முதலிட்டிருக்கின்றார்.
 
அடிக்கடி மலேசியாவுக்கு சென்ற வந்துள்ளார். அவரது சகோதரரும், சகோதரியும் கூட புலிகளின் செயற்பாட்டாளர்களே. அந்தச் சந்தேகநபர் மேல் விசாரணைக்காக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். – இவ்வாறு அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபிக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கினார்!
 
பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்பவருக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் பாலேந்திரன் ஜெயக்குமாரி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது, போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் என கொழும்பு ஊடகம் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் பங்கேற்ற போது வடக்கிற்கு பணயம் செய்திருந்தார். இதன் போது, ஜெயகுமாரி கமருனிடம் முறைப்பாடு செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இராணுவத்தினர் இளைஞர்களை கடத்துவதாகத் தெரிவித்து ஜெயகுமாரி, பிரிட்டன் பிரதமரிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததாகவும் அந்த ஊடகம் குற்றச்சாட்டுக்களை தொடராக முன்வைத்துள்ளது.
 
இதன் மூலம் ஜெயக்குமாரியை தொடர்ச்சியாக தடுத்து வைப்பதன் மூலம் சர்வதேச விசாரணையின் போது உள்நாட்டில் சாட்சி அளிக்க முன்வருவோருக்கான எச்சரிக்கையை பாதுகாப்பு தரப்பு ஊடக செய்திகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment