Saturday, April 19, 2014
சியோல்::தென் கொரிய கப்பல் விபத்தில் 28 மாணவர்கள் பலியாயினர். காணாமல் போன 270 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில், மீட்கப்பட்ட பள்ளி துணை முதல்வர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.தென் கொரியாவின் டான்வோன் உயர் நிலை பள்ளி மாணவர்கள் 325 பேர் கடந்த புதன்கிழமை ஜிஜூ தீவுக்கு சுற்றுலா சென்றனர். மாணவர்கள் உள்பட 475 பேருடன் சென்ற செவோல்என்ற சொகுசு கப்பல் ஜிஜு தீவுக்கு அருகே பலத்த சூறாவளியில் சிக்கி நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் 28 மாணவர்கள் பலியாயினர். 270 பேரை காணவில்லை. தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினரும் கடற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது. கப்பல் கவிழ்ந்த போது பயணிகளை காப்பாற்றாமல் 68 வயதான கேப்டன் லீ ஜுன் சியோக் மற்றும் சில சிப்பந்திகள் கடலுக்குள் குதித்து உயிர் தப்பினர்.
அவர்களை போலீசார் தீவிரமாக தேடி இன்று அதிகாலை கைது செய்தனர். இதற்கிடையில் கடலில் இருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஜிண்டோ என்ற தீவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் டான்வோன் பள்ளி பெண் துணை முதல்வர் காங்க் என்பவரும் இருந்தார். பள்ளி மாணவர்கள் 325 பேரில் 28 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், சோகத்துடன் இருந்த துணை முதல்வர் காங்க், நேற்று தீவில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வேறு தகவல் எதுவும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment