Saturday, April 19, 2014

மட்டக்களப்பின் வரலாற்று சின்னமாக கருதப்படும் மண்முனைப்பாலம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Saturday, April 19, 2014
இலங்கை::மட்டக்களப்பு வாவி மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து நிற்பதால் வாவியின் கிழக்குப் பகுதி எழுவான் கரை என்றும் மேற்குப் பகுதி படுவான் கரை எனவும் பெயர் பெறலாயிற்று. இந்தப் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான தொடர்பு மட்டக்களப்பு மண்முனை வாவி ஊடாகவே நடைபெற்று வந்தது.இதற்காக பாதை எனப்படும் பெரிய இயந்திரப்படகு இப்போது வரை பாவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும், மக்கள் எதிர் கொண்டு வரும் பெருமளவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மண்முனைப் பாலம் இன்று ஏப்ரல் 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில், ஜப்பானியத் தூதுவர் நொபகிடோ ஹோபோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  உள்ளிட்டோரும் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மண்முனைப்பாலத்திற்கு செல்லையா இராசதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கருங்கற்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் 1983ஆம் ஆண்டுக்கு பின் பாதுகாப்பு அமைச்சு இந்த பால கட்டுமான பணிக்கு அனுமதி வழங்காததையடுத்து இது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் படுவான்கரையில் உள்ள பல கிராமங்கள் நன்மை அடைய உள்ளன.

2010ஆம் ஆண்டு தேசிய நல்லிணக்க அமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் பொறுப்பேற்றதை தொடர்ந்து ஜப்பான் தூதுவரை சந்தித்து மண்முனைத்துறை பாலம் அமைப்பதற்கு உதவுமாறு கோரியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும்,  எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான மண்முனை ஆற்றுக்கு மேலாக இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2012 செப்ரம்பர் 04ஆம்திகதி பட்டிப்பளை அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

பாலத்தின் நிர்மாண பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 16ஆம்திகதி வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று மண்முனைப்பாலம் 210 மீற்றர் ஆகவும், இரு பக்கங்களிலும் 500 மீற்றர் அளவான மதகாகவும் (கோஸ்வே) மொத்தமாக 1210 மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளது.

மண்முனைத்துறை பாலத்துக்கான வேலைத்திட்ட அங்குரார்ப்பன்ம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அமைச்சர் பஷில் ராஜபக்சவினால் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தது.
ஜப்பான் நாட்டின் நன்கொடையில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் வகையில் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும்; அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களையும், பலநூறாயிரம் ஏக்கர் நெற்காணிகளையும், தன்னகத்தே கொண்ட இப் படுவான்கரைப்பிரதேசம் பார்ப்பவர்களின் கண்களையும் மனங்களையும் கொள்ளை கொள்ளும் வனப்பு மிகு பகுதியாகப் பாணப்படுகிறது. இம் மக்களின் சமூகப் பொருளாதார கல்வி வளர்ச்சிக்கு இவ் மண்முனை போக்குவரத்துப் பாதை மிகவும் சிக்கலானதாகவே இருந்து வந்தது.

இது ஒரு சவாலானதாக இருந்தமையினால் பின்தங்கிய பிரதேசம் என்று மிக நீண்ட காலகமாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. இது மண்முனைப் பாலத்திறப்பு காரணமாக நீங்குவதுடன் பிரதேசம் தலைநிமிர்வதற்கும் காரணமாக அமைகின்றது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றபோது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்வினை கண்டுகளிக்க கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment