Tuesday, March 18, 2014

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது: அரசாங்கம்!

Tuesday, March 18, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நாடு ஒன்றுக்கு எதிராக பலவந்தமான தீர்மானங்கள் அல்லது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. ஈரான் மற்றம் மியன்மார் போன்ற நாடுகள் தொடர்பில் பலவந்தமான தீர்மானங்கள் எடுக்கக் கூடாது என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற போது இந்த விடயங்கள் குறித்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது. யதார்த்தமான பேச்சுவார்த்தைகள் மற்றும் கொள்கை அடிப்படையிலேயே நாடுகளின் மனித உரிமை மேம்பாடு குறித்த நடவடிக்கைகள் அமைய வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டு மனித உரிமைப் பொறிமுறைமையை வலுப்படுத்தும் வகையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகில கால மீளாய்வு முறைமையை பின்பற்றி நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. மியன்மார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் விவகாரங்களில் ஆக்கபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பங்களிப்பினை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணைகளை நடாத்துமாறு வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment