Tuesday, March 18, 2014

ஜெனீவாவில் சீனா இலங்கைக்கு நேரடி ஆதரவு வழங்கும்: சீன உதவித் தூதுவர்!

Tuesday, March 18, 2014
இலங்கை::ஜெனீவாவில் எதிர்வரும் 28ம் தேதி மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கைக்கு சீனா நேரடியான ஆதரவினை வழங்குமென இலங்கைக்கான சீன உதவித் தூதுவர் ரென் பகியாங்(Ren Faqiang) தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று தெனியாய முலடிறயனவில் புதிய வீதிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றபோது அந்நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கையை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்தும் பூரண ஆதரவினை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாத்தறை, தெனியாய பகுதியில் முலடியன, கம்புறுபிட்டிய உட்பட புனரமைக்கப்பட்ட நான்கு வீதிகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன. அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய சீன உதவித் தூதுவர், இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற வகையிலும், நெருக்கமான அயல்நாடு என்ற வகையிலும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு சீனா ஆதரவாக செயற்பட தயாராகவுள்ளது.
யுத்தம் நிறைவுற்றதன் பின்னர், இலங்கையில் மனித உரிமை பேணல் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் உணர்ந்துள்ளதாகவும், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைக்கு மனித உரிமையை ஆயுதமாக எடுத்துச் செயற்படுவதை எமது அரசாங்கம் கடுமையாக எதிர்க்கின்றது. மனித உரிமையைப் பாதுகாப்பதில் முக்கிய காரணியாக அமைவது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டுவதே.
அபிவிருத்தி மதங்களுக்கிடையிலான நல்லுறவு, மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், நட்பு நாடான சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு சீனா எதிராகவே செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment