Monday, March 10, 2014

மலேசிய விமானத்தில் பயணித்த 4 பேர் பயங்கரவாதிகளா? இரண்டு நாட்களாகியும் மர்மம் நீடிப்பு!!!

Monday, March 10, 2014
கோலாலம்பூர்::சீனாவை நோக்கி சென்ற மலேசிய விமானம், வியட்னாம் நாட்டின் மேல் பறந்து சென்றபோது நடுவானில் மாயமானது. இந்த விமானத்தில் சென்ற நான்கு பேர், போலி மற்றும் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளதால், அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, 7ம் தேதி இரவு, இந்திய நேரப்படி, 11:10 மணிக்கு, சீன தலைநகர், பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 227 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்கு பின், விமானம், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் உஷாரடைந்து, விமானத்தின் நிலை குறித்து, தீவிரமாக ஆராய்ந்தனர்.பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின், வியட்னாம் நாட்டின், பூ குயாக் தீவுக்கு அருகே, தென் சீனக் கடலில், எண்ணெய் படலங்கள் தென்பட்டன. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கடலில் விழுந்ததால் இந்த எண்ணெய் படலம் ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. அந்த பகுதிக்கு சீனா, வியட்னாம் மீட்பு கப்பல்கள், போர் விமானங்கள் விரைந்துள்ளன.

மலேசியாவின் சார்பில், ஒரு விமானமும், இரண்டு ஹெலிகாப்டர்களும், நான்கு படகுகளும் அனுப்பப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாடு, மூன்று ரோந்து கப்பல்களையும், ஒரு விமானத்தையும், உதவிக்கு அனுப்பியுள்ளது.விமானத்தில், 152 சீனர்களும், மலேசிய நாட்டவர், 38 பேரும், இந்தியர்கள், ஐந்து பேரும், இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள், ஆறு பேரும், பிரான்ஸ் நாட்டினர், மூன்று பேரும், அமெரிக்கர்கள், நான்கு பேரும், நியூசிலாந்தை சேர்ந்த, இருவரும், உக்ரைன் நாட்டவர், இரண்டு பேரும், கனடாவை சேர்ந்த, இருவரும், ரஷ்யா, இத்தாலி தைவான் நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா, ஒருவரும் பயணித்துள்ளனர்.இந்தியர்கள் ஐந்து பேரில், ஒருவர், சென்னையைச் சேர்ந்த, சந்திரிகா சர்மா. மங்கோலியா நாட்டில் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க, சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன செயலர், சந்திரிகா சர்மா இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.

மர்மம் நீடிப்பு:

இரண்டு நாட்களாகியும் விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானத்தைக் கண்டறியும் முயற்சியில், அமெரிக்க புலனாய்வு நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மலேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை ஆராய்ந்தனர்.இதற்கிடையே, இவ்விமானத்தில் பயணித்ததாக கருதப்பட்ட இத்தாலி மற்றும் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊரில் இருப்பதாக தெரியப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, இவர்கள் இருவரும், தங்கள் பாஸ்போர்ட்டை, தாய்லாந்தில் தவறவிட்டவர்கள்.

பயங்கரவாதிகள் சதியா?

எனவே, இந்த பாஸ்போர்ட்டை திருடியவர்கள், மலேசிய விமானத்தில் பயணித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதே போல, சீனாவை சேர்ந்த இருவரும் போலி பெயரில் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளனர். எனவே, இந்த நான்கு பேரும் பயங்கரவாதிகளாக இருக்கலாம். இவர்கள் விமானத்தைக் கடத்தி, கடலுக்குள் மூழ்கச் செய்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
 
விமானம் மாயம்:தொடரும் மர்மம்?
 
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது தொடர்பாக இன்னமும் மர்மம் நீடிக்கிறது. மாயமான விமானத்தில் உதிரி பாகங்கள் வியட்நாம் அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக முதலில் தகவல் வந்தது. ஆனால், வியட்நாம் அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. விமான கதவு ஒன்று கிடைத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.
விமானம் மாயம் விசித்திரம்-மலேசிய அரசு?
 
விமானம் மாயமான விஷயத்தில் அனைத்துமே புரியாத புதிராக உள்ளது. விமானத்தை கண்டறியும் பணியில் பல நாடுகள் உதவி வருகின்றன என, மலேசிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். இந்நிலையில், குறிப்பிட்ட விமானத்தின் பயண திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், அதில் பயணம் செய்தவர்களின் பின்னணி குறித்த தகவல்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவி்ததுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம், விரைவில் விமானம் மாயமானது குறித்த புதிரை அவிழ்த்துவிடுவோம் என்றும், இதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளதாகவும் கூறி உள்ளது.
 
கடத்தல் யூகத்தை மறுக்கவில்லை-ஏர்லைன்ஸ்!!
 
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற யூகத்தையும் மறுக்க முடியாது என்று, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். மேலும், விமானத்தில் பயணம் செய்துள்ளவர்கள் குறித்து, வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment