Tuesday, March 18, 2014

இலங்கையில் விடுதலையான 140 மீனவர்கள் ஊர் திரும்பினர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்பு!

Tuesday, March 18, 2014
நாகை:இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 177 பேர், சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் 6 பேர் (2 படகுகள்), மண்டபம் மீனவர்கள் 36 பேர் (9 படகுகள்), ராமேஸ்வரம் மீனவர்கள் 51 பேர் (9 படகுகள்), ஜெகதாபட்டினம் மீனவர்கள் 19 பேர் (5 படகுகள்), ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 பேர் (1 படகு) என 116 மீனவர்கள் நேற்று மதியம் இந்திய கடல் எல்லையில், இந்திய  கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டன.

கமாண்டர் உத்தல்சிங் தலைமையிலான கடற்படையினர் மீனவர்களை 2 கப்பல்களில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு காரைக்கால் மேலவாஞ்சூர் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.நாகை மீன்வளத் துறை இணை இயக்குனர் குப்புராஜ், உதவி இயக்குனர் காசிநாதபாண்டி மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள், குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை வரவேற்றனர். பின்னர் அவர்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

விடுதலையான மீனவர்கள் கூறுகையில், ‘சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். எங்களுக்கு வழங்கப்பட்ட உணவு மிக மோசமாக இருந்தது. இதுபற்றி சிறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த பலனும் இல்லை. அங்குள்ள தமிழ் போலீசார் தான், எங்களுக்கு அவ்வப்போது ஓரளவு சாப்பிடும்படியான உணவை ஏற்பாடு செய்து கொடுத்தனர்‘ என்று தெரிவித்தனர்.

இதேபோல, ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரும் நேற்று இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடலோர காவல் படைக்கு சொந்தமான ராஜ்கமல் கப்பலில் இந்த மீனவர்கள் 24 பேரும் நேற்று மாலை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீன்வளத் துறையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட 24 மீனவர்களும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீதம் உள்ள 37 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் ஊர் திரும்ப உள்ளனர்.

No comments:

Post a Comment