Wednesday, February 26, 2014

கைது செய்தால் பரவாயில்லை: விஜயதரணி ; கைது செய்ய விடமாட்டோம்: ஞானதேசிகன்!

Wednesday, February 26, 2014
சென்னை::என்னை கைது செய்தாலும் பரவாயில்லை,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணியும்; ""கைது செய்ய விடமாட்டோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் பரபரப்பாக பேசினர். ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை, விடுதலை செய்யும் முடிவுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில், வள்ளுவர் கோட்டம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், குமரி அனந்தன், அசோக்குமார், சத்தியமூர்த்தி, ரஞ்சன்குமார் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவர், "கராத்தே' தியாகராஜன் பேசுகையில், ""இந்த ஆர்ப்பாட்டத்தை, 21, 22ம் தேதி நடத்துங்கள்' என, ஞானதேசிகன் கூறினார். ஆனால், "24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தான் அனுமதி இருக்கிறது' என, போலீசார் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தேதியில் தான், நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்,'' என்றார்.

விஜயதரணி பேசியதாவது: ராஜிவ் கொலையாளிகளுக்கு விடுதலை அளித்ததை எதிர்ப்பதால், என் மீது சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு வழக்கு, சட்டசபை உரிமை மீறல் பிரச்னை எழுப்பி, என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றவர்களை படுகொலை செய்திருந்தால் திராவிட கட்சிகள் விட்டு விடுமா? "விடுதலைப்புலிகளால், எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' என்ற காரணத்தை சொல்லி தான், கறுப்பு பூனை பாதுகாப்பு படையை முதல்வர் ஜெயலலிதா பெற்றுள்ளார்.
 
புலிகளை விடுவிக்கும் நடவடிக்கையை எடுத்திருப்பதால், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படையை, வாபஸ் பெற்றுக் கொள்ள சொல்வாரா? தி.மு.க., ஆட்சியில், விடுதலைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என்ற குற்றச்சாட்டை கூறி, ஆட்சியை கலைக்க, அ.தி.மு.க., பரிந்துரை செய்தது. அதே விடுதலைப்புலிகளை விடுவிக்கும் அ.தி.மு.க., அரசை ஏன் கலைக்க கூடாது? இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பேசியதாவது: ராஜிவ், தமிழகத்திற்கு, 13 முறை வந்தார். வானத்தில் விமானம், ஹெலிகாப்டர் மூலம் பறந்து மக்களை சந்திக்கவில்லை. வாகனத்தில் உட்கார்ந்து, இரவு முழுவதும் சுற்றி சுற்றி வந்து, பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால், நாடு குட்டிச்சுவராகி விடும். எனவே, அவர் கோட்டையில் இருக்கட்டும்; டில்லிக்கு வர வேண்டாம். இவ்வாறு, மணிசங்கர் அய்யர் பேசினார்.

ஞானதேசிகன் பேசியதாவது: விஜயதரணியை கைது செய்ய விடமாட்டோம். சிறையில் இருக்கும் ஏழு பேரையும், "குற்றவாளிகள் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறவில்லை. சாந்தன், முருகனுக்கு ராஜிவ் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், ஏற்கனவே இவர்களை பற்றி வைகோ தெரிந்து வைத்திருக்கிறாரா? நீதிபதிகளை விமர்சனம் செய்ய வேண்டாம். உருவப்பொம்மை எரிக்கக் கூடாது.
கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவு சட்ட விரோதமானது; அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கும் முன், தமிழக அரசு, தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment