Friday, January 24, 2014

இலங்கை - சீன பல்கலைக்கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Friday, January 24, 2014
இலங்கை::ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பட்டப் பின் படிப்பு மாணவர்களுக்கு சீன விஞ்ஞானக் கல்வி பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
 
தகவல் தொடர்பு சாதன அமைச்சில் நேற்று இடம்பெற்ற இலங்கை - சீன பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி என்.எல்.ஏ. கருணாரத்னவும் சீன பல்கலைக்கழகம் சார்பில் அதன் உப தலைவர் பேராசிரியர் சூஸியாங்பின்னும் கைச்சாத்திட்டனர்.
 
சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் ரணில் டி சில்வா சீன உயர்ஸ்தானிகராலய அரசியல்துறை ஆலோசகர் ரென் பெகிங் ஆகியோர் முன்னிலையில் மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக பேராசிரியர் ரணில் டி சில்வா தெரிவித்தார்.
 
இலங்கையிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர் தொகைக்கேற்ப சீன பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான புலமைப்பரீட்சைகளை வழங்கும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
 
மேற்படி சீன பல்கலைக்கழகத் தூதுக் குழு உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இதன் மூலம் சீன மாணவர்கள் இலங்கையில் புலமைப்பரிசில் பெறுவது உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பேராசிரியர் ரணில் டி சில்வா தெரிவித்தார்.

No comments:

Post a Comment