Tuesday, December 31, 2013

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 256 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்!

Tuesday, December 31, 2013
இலங்கை::சென்னை::இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 256 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ம்மாதம் 12ம் தேதி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 111 பேரும், 15 படகுகளும் சிறை பிடிக்கப்பட்டன. அவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 28ம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்களையும், 29ம் தேதி பாம்பனைச் சேர்ந்த 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மீண்டும் பிடித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இவ்வாறு செயல்படுவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பகுதியாக இருந்த கச்சதீவை தாரை வார்த்ததன் காரணமாக, தமிழக மீனவர்கள் பாக்ஜல சந்தி பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து தொடர்ந்து பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டாலும், அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரை கொடூரமாக தாக்கப்படுவது தொடர்கிறது. இந்திய அரசு இனிமேலும் பொறுத்து கொள்ளாமல், இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி, வரும் ஜனவரி 20ம் தேதி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தலாம் என ஏற்கனவே டிசம்பர் 23ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. இந்த சூழ்நிலையில், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்காது. எனவே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 256 தமிழக மீனவர்களையும், அவர்களது 81 படகுகளையும் விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment