Friday, November 15, 2013
இலங்கை::கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் P.அரியநேந்திரன் அவர்களே!
அதை மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையம் என்றே அழைத்துவிட்டுப் போங்கள். ஏனெனில், மஞ்சந்தொடுவாயும் முஸ்லிம் கிராமம்தான். காத்தான்குடி நகரம் பொலிஸ் நிலையம் இல்லாத ஊராகவே இருந்துவிட்டுப் போனது வரலாறாகட்டும்!
காத்தான்குடி பொலிஸ் நிலையம் மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் அமைந்துள்ளதாகவும் அதை மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென தாங்கள் மட்டு. மாவட்ட செயலாளர் திருமதி. சாள்ஸுக்கு எழுத்து மூலமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் மிக விரைவில் மட்டக்களப்பு புகையிரத நிலையம்காத்தான்குடி புகையிரத நிலைய மென மாற்றமடையக் கூடும் என கூறியிருந்ததாகவும் இணையத்தளமூடாக அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
தமிழ் – முஸ்லிம் உறவை கட்டி வளர்க்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவம் அர்ப்பணிப்புடனும் சில விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டுவரும் இந்த வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட நீங்கள் இவ்வாறான பிரதேசவாத இனவாத கருத்துக்களை அண்மைக்காலமாக வெளியிட்டு வருவது வருந்தத்தக்கது. இனவாதத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க காத்திருக்கும் இனவாதிகளுக்கு சார்பான கருத்துக்களை தயவுடன் பரப்பவேண்டாம். இந்தப் பிரதேசம் இனப்பிரச்சினையால் பட்ட துன்பத்தின் வடுக்கள் இன்னும் எம்மைவிட்டு அகலவில்லை. இந்த பிரதேச தமிழ் முஸ்லிம் அப்பாவி மக்களும் அதை விரும்பவில்லை.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெயரை மாற்றி நீங்கள் எதை சாதிக்கப்போகிறீர்கள் என புரியவில்லை! மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் முடங்கிக்கிடக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெயர் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உங்கள் இனவாத கருத்துக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டாம் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
1990ம் ஆண்டுவரை காத்தான்குடி நகருக்கு ஒரு பொலிஸ் நிலையத்தின் தேவைப்பாடு இருக்கவில்லை. எங்கள் பிரச்சினைகளை நாங்களே பள்ளிவாயல்கள், சமரச சபைகள், சம்மேளனம் ஊடாக பேசி தீர்த்துக்கொண்டோம். 1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி பகுதியில் இரு பள்ளிவாசல்களில் பாசிஸ புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். அதன் பிற்பாடே அரசாங்கம் காத்தான்குடி மக்களின் பாதுகாப்பு கருதி முதலாம் குறிச்சியில் அமைந்துள்ள அந்-நாசர் வித்தியாலயத்தில் இப்பொலிஸ் நிலையத்தை அமைத்தது பிற்பாடு பாடசாலையின் அவசியம் கருதி காத்தான்குடி - மஞ்சந்தொடுவாய் எல்லைப்பகுதியில் எமதூர் தனவந்தர் ஒருவருக்கு சொந்தமான காணியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு தற்போதும் இயங்கி வருகிறது.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசம் ஒன்றில் விபச்சார விடுதி முற்றுகைக்குள்ளானது. சில தமிழ் இனவாத ஊடகங்கள் ”காத்தான்குடி பிரதேசத்தில் விபச்சார விடுதி முற்றுகை” என்று தலைப்பிட்டு இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. காத்தான்குடி மண்ணுக்கு அபகீர்த்தி ஏற்படும் செய்தியை கண்டும் காணாமலும் இருந்த நீங்கள் தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையம் மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையம் என அழைக்கப்பட வேண்டுமென கோரிக்கைவிடுவது வேடிக்கையாக உள்ளது.
MSM.பாயிஸ் – சவூதி அரேபியா.


+Member+of+Parliament,+Batticaloa+ltte-tna-meeting_1.jpg)
No comments:
Post a Comment