Thursday, November 21, 2013
சென்னை::இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசின்மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின.
ஆனால், இந்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது இந்திய உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்களான் சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'இலங்கையில் நடைபெற்ற உச்சி மாநட்டில்; கலந்துகொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்துகொண்டதும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, '1994ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், அடிப்படை கட்டமைப்புகளை மீறாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், மக்களின் போராட்டங்களை கருத்தில் கொள்ளாமல், தமிழகத்தின் பிரதிநிதிகளை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள முடிவெடுத்தது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.
இனி இலங்கை குறித்த வெளியுறவு தொடர்பான விடயங்களை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம் என்றும் மனுதாரர் சுந்தரவதனன், மனுவை தாக்கல் செய்த வக்கீல் ராஜாராமன் ஆகியோர் தரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு இன்னும் இரண்டு வாரங்களில் விசாரணைக்கு வருகிறது.

No comments:
Post a Comment