Wednesday, November 13, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட் உத்தரவு!

Wednesday, November 13, 2013
இலங்கை::மதுரை:இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட் கிளை இன்று தள்ளுபடி செய்தது.மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த வக்கீல் ராய்ஸ் இமானுவேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘ இலங்கையில் நவ.15 முதல் 17ம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் அக்.24ம் தேதி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை மத்திய கேபினட் செயலாளருக்கு, தமிழக சட்டசபை செயலாளர் அனுப்பியுள்ளார். ஆனால், அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இலங்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் மத்திய அரசு பதில் தெரிவிக்கவில்லை. எனவே, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்க வேண்டும். அந்த மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து பிரதிநிதிகள் குழுவை அனுப்பக் கூடாது என உத்தரவிட வேண்டும்‘ என தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், ரவி முன்பு 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று  மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment