Sunday, November 3, 2013

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான 7 ஒருநாள் போட்டி: ரோகித்சர்மா இரட்டை சதம் : தொடரை கைப்பற்றியது இந்தியா!

Sunday, November 03, 2013
பெங்களூர்::ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் கடைசி போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், தவானும் களமிறங்கினர்.
ரோகித்சர்மா நிதானமாக ஆட்டத்தை தொடங்க, மறுமுனையில் தவான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் முதல் விக்கெட் 112 ரன்களுக்கு தான் விழுந்தது. தவான் 60 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 57 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் விளாசினார். அதன்பிறகு ரோகித் சர்மாவுடன் அதிரடி ஆட்டக்காரர் கோக்லி ஜோடி சேர்ந்தார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். பின்னர் ரெய்னா களமிறங்கினார். அவர் தன் பங்கிற்கு 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து யுவராஜ்சிங் ரோகித்சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை சேர்க்கவில்லை. 12 ரன்னில் அவர் வெளியேறினார்.
அப்போது ஸ்கோர் 207 ஆக இருந்தது. 33.5 ஓவர்கள் முடிந்திருந்தது. இந்த நிலையில் கேப்டன் டோனி களமிறங்கினார். இந்தியா 300 ரன்களை எப்படியும் கடந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை விட ஆட்டம் களை கட்டியது. ரோகித் டோனி ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சின்னாபின்னமாக்கினர்.பவுண்டரிகளை விட சிக்சர்கள் பறந்தன. பெரும்பாலான சிக்சர்கள் ரசிகர்கள் மாடத்திலேயே போய் விழுந்தது. 5வது விக்கெட் ஜோடியாக இவர்கள் 94 பந்துகளில் 167 ரன்களை குவித்தனர். இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 151 ரன்கள் குவித்தது. இதில் 101 ரன்கள் கடைசி 5 ஓவரில் வந்தவை ஆகும்.  அதிரடியாக ஆடிய ரோகித்சர்மா தனது சதத்தை 114 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

ஆனால் அவரது அதிரடி ஆட்டம் அத்துடன் நிற்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் வீசிய பந்து ரோகித்தின் மட்டையில் பட்டு சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறந்தன. 156வது பந்தில் அவர் தனது இரட்டை சதத்தை கடந்தார். ஆனால் கடைசி ஓவரில் அவர் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 158 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகளும், 16 சிக்சர்களும் விளாசினார். ஒரே போட்டியில் 16 சிக்சர்கள் அடித்தது உலக சாதனையாகும். வாட்சன் 15 சிக்சர்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்தார். டோனியும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடியாக ஆடினார். 38 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து அவர் ரன்அவுட் ஆனார். 50 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன் எடுத்தது.
இதையடுத்து 384 ரன் என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கியூக்சும், பின்ச்சும் களமிறங்கினர். பின்ச் 5 ரன்களுக்கு வெளியேற ஹாடின் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். ஆனால் கியூக்ஸ் 23 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பெய்லி 4 ரன்களுக்கும், வோக்ஸ் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. ஆனால் மேக்ஸ்வெல்  பல்க்னர் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை மிரட்டினர். பல்க்னர் 57 பந்துகளில் சதம் அடித்தார். குறைந்த பந்துகளில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய வாட்சனும் அதிரடியாக ஆடினார். 22 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த அவர் வெளியேறினார். இதில் 6 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்ததாக கோல்டர் நைல் 3 ரன்னில் வெளியேற பல்க்னருடன் மெக்கே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய வெற்றியை பறித்து விடுவார்களோ என்ற அச்சம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் மெக்கே 18 ரன்களில் வெளியேறினார். கடைசி விக்கெட்டாக பல்க்னர் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 73 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் விளாசினார். 45.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 7 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 32 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனாகவும், தொடரில் 491 ரன்கள் குவித்த அவரே தொடர் நாயனாகவும்தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் மொத்தம் 38 சிக்சர்கள் விளாசப்பட்டன. இதுவும் ஒரு உலக சாதனையாகும்.

சாதனை பற்றி தெரியாது:

தொடர் நாயகன் விருது பெற்ற ரோகித்சர்மா கூறுகையில், நான் 200 ரன் கடப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை. நான் அவுட் ஆகாமல் நிலைத்து ஆடவேண்டும் என்றே களமிறங்கினேன். இந்த மைதானம் சிறியது என்பதால் சிக்சர்கள் பறந்தன. 16 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்தது பற்றி உண்மையிலேயே எனக்கு தெரியாது. 380 ரன்கள் எடுத்த போதிலும் அது பாதுகாப்பான ஸ்கோராக இருக்குமோ என்ற நிலையே இருந்தது. தொடரில் தவானும், விராட்டும் சிறப்பாக ஆடினார்கள். அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடரை எதிர்பார்த்து இருக்கிறேன் என்றார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment