Tuesday, September 3, 2013

உளவுத்துறை ஊழியர்களையே ரகசியமாக வேவு பார்க்கிறது US!

Tuesday, September 03, 2013
வாஷிங்டன்::அமெரிக்க உளவுத்துறைக்குள் ஊடுருவ அல்-கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருவதாக சிஐஏ தெரிவித்துள்ளது.
 
இதனால் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து சிஐஏ ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
 
சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க உளவு அமைப்பு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையில் வேலைகோரி விண்ணப்பிப்போர், வேலையில் சேர்க்கப்பட்டோர் ஆகியோரில் பலர் குறித்தும் சந்தேகம் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் இதில் பணியில் உள்ளவர்களின் பின்னணி குறித்து அடிக்கடி ரகசிய விசாரணை நடத்த வேண்டிய நிலைக்கு சிஐஏ தள்ளப்படுகிறதாம்.
 
குறிப்பாக அமெரிக்க உளவு அமைப்பில் பணியில் உள்ள 5ல் ஒருவர் மீது பெரிய அளவில் சந்தேகம் வந்துவிடுகிறதாம். இவர்களுக்கு தீவிரவாத அமைப்புகள், பிற நாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றன என்கிறது சிஐஏ
 
குறிப்பாக அல்-கொய்தா, ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகள் தான் அமெரிக்க உளவுப் பிரிவுக்குள் ஊடுருவ அதீத முயற்சிகளில் இறங்குகின்றன.
கடந்த ஆண்டு மட்டும் 4,000 ஊழியர்கள் குறித்து சிஐஏவும். என்எஸ்ஏ அமைப்பும் ரகசிய விசாரணை நடத்தியுள்ளன.
 
ஆனால், இவர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தான் என்எஸ்ஏவின் நெட்வோர்க்கில் இருந்து ஆயிரக்கணக்கான ரகசிய தகவல்களை டெளன்லோட் செய்து விக்கிலீக்சுக்கு வழங்கியுள்ளனர் பிராட்லி மேனிங் மற்றும் ஸ்னோடென் போன்றோர்.
 
இப்போது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துவிட்டார் ஸ்னோடென் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment