Friday, September 27, 2013

நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவு!

Friday, September 27, 2013
UN::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால்  நேற்று காலை  சமர்ப்பிக்கப்பட்ட வாய் மொழி மூல அறிக்கை குறித்து உறுப்பு நாடுகளுக்கு இடையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.
 
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் நவனீதம்பிள்ளைக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ள அதேவேளை, பாகிஸ்தான், ரஸ்யா, வெனிசுலா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
 
யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என சீனா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
 
எனினும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
 
வடக்கில் தேர்தல்களை நடாத்தியதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது....
 
புனரமைப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் போதுமான அங்கீகாரத்தை வழங்கவில்லை என இந்திய பிரதிநிதி குறிப்பிட்டார்.
 
இலங்கையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்திய இலங்கை அரசு சர்வதேசத்திற்கு தனது அர்ப்பணிப்பை வெளிகாட்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.
 
வடக்கு மாகாண மக்களின் அவசர தேவைகளை உணர்ந்து இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஆக்கபூர்வமாக கூட்டாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
 
அதேவேளை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தொழிற்நுட்ப உதவிகளை இலங்கை பெற்று கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அமெரிக்க பிரதிநிதி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 
இதனிடையே வடக்கு மாகாண சபை தேர்தல் வெற்றிகரமான நடத்தப்பட்டமையை வரவேற்ற அவுஸ்திரேலிய பிரதிநிதி, இலங்கையை தனிமைப்படுத்தாது மனித உரிமை கவலைகளை சீர்செய்ய அந்த நாட்டை ஊக்கப்படுத்த வேண்டியதே சிறந்த வழியாகும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment