Saturday,September,14, 2013
சென்னை::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், சதி திட்டம் குறித்து
விசாரிக்கும், சி.பி.ஐ.,யின் பல்நோக்கு நடவடிக்கை கண்காணிப்பு குழுவின் விசாரணையை
கண்காணிக்கும்படி, சென்னை, "தடா' கோர்ட்டில், பேரறிவாளன் மனுத் தாக்கல்
செய்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, பேரறிவாளன், வேலூர்
சிறையில் உள்ளார். சென்னை, "தடா' கோர்ட்டில், பேரறிவாளன் தாக்கல் செய்த மனு: ஜெயின்
கமிஷன் அறிக்கை அடிப்படையில், ராஜிவ் கொலையின் பின்னணியில் உள்ள சதி திட்டம்
குறித்து, மேற்கொண்டு விசாரணை நடத்த, சி.பி.ஐ.,யின் பல்நோக்கு நடவடிக்கை
கண்காணிப்புக் குழு, ஏற்படுத்தப்பட்டது. விசாரணையில் ஏற்படும் கால தாமதத்தால், நான்
பாதிக்கப்படுகிறேன். முறையான விசாரணை நடந்தால், மறைக்கப்பட்ட பல உண்மைகள்
வெளிவரும்.
மறு விசாரணை நடத்த
வேண்டும் என, நான் கோரவில்லை. பெயர் அளவுக்கு, விசாரணை நடப்பதாக தெரிகிறது. எனவே,
விட்டுப் போன பகுதிகளைப் பொறுத்தவரை, அதுகுறித்து நடக்கும் விசாரணையை, சரிவர
கண்காணிக்க வேண்டும். புலன் விசாரணையை சரிவர கண்காணித்தால், பெயர் குறிப்பிடப்படாத
பலரை பாதுகாக்க, விசாரணை ஏஜன்சி செயல்படுவது தெரிய வரும். விசாரணை நிலுவையில்
இருந்தாலும், எதற்காக புலனாய்வு ஏஜன்சி அமைக்கப்பட்டதோ, அதற்கான காரணத்தை அடைய,
சிறப்பாக செயல்படாதது தெரிய வரும்.
எனவே, சி.பி.ஐ., மற்றும் பல்நோக்கு நடவடிக்கை
கண்காணிப்பு குழுவின், ஆவணங்களைப் பெற்று, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
விட்டுப் போன பகுதிகளைப் பொறுத்தவரை, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்; விசாரணையை
கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு குறித்து, நீதிபதி
தண்டபாணியிடம், வழக்கறிஞர்கள் என்.சந்திரசேகரன், எஸ்.ரூபன் முறையிட்டனர். இம்மாதம்,
19ம் தேதி, மனு, விசாரணைக்கு வருகிறது.

No comments:
Post a Comment