Thursday, September 26, 2013

ஆர்வத்துடன் ஓட்டு போட்ட தமிழர்கள்: இலங்கை மாகாண தேர்தல் பற்றி கோபாலசாமி சிறப்பு பேட்டி!!

Thursday, September 26, 2013
சென்னை::மிகுந்த பரபரப்புக்கு இடையில், இலங்கையின் வடக்கு மாகாண தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்தல் நடந்து, தமிழ்தேச கூட்டணி (டி.என்.ஏ.,) பெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த கூட்டணி சார்பில் போட்டியிட்ட, விக்னேஷ்வரன், மாகாணத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச அழுத்தத்தோடு நடத்தப்பட்ட, இந்த தேர்தலை கண்காணிக்க இந்தியாவிலிருந்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தலைமை யில், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேச மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் உட்பட, 20 பேர் கொண்டகுழு, இலங்கைக்கு சென்றது. இக்குழுவில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாள நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.தெற்காசிய நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்பு சார்பில், இக்குழு, இலங்கைக்கு சென்றது.வெற்றிகரமாக நடந்து முடிந்த தேர்தல் குறித்து, கோபாலசாமியுடன், நடத்திய சிறப்பு நேர்காணல்:

தேர்தலை நடத்தியவர்கள் யார்?

இந்திய தேர்தல் ஆணையம் போல், சுய அதிகாரம் படைத்த அமைப்பாக, இலங்கை தேர்தல் ஆணையம் இல்லை. தேர்தலை நடத்தும் ஒரு அமைப்பாக மட்டுமே, இலங்கை தேர்தல் ஆணையம் உள்ளது. அதிகாரங்கள் எல்லாமே, இலங்கை அரசிடம் தான் குவிந்துள்ளது.அதனால், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, தேர்தல் அத்துமீறல்களை, இலங்கை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது.தேர்தல் ஆணையம் போன்ற தன்னிச்சையான அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க, 17வது அரசியல் சட்ட திருத்தத்தை, இலங்கை அரசு கொண்டு வந்தது. ஆனால், 18வது திருத்தம் ஒன்றை கொண்டு வந்து, இந்த அதிகாரத்தை பறித்து விட்டனர்.இருந்தாலும், ஒரு சில சம்பவங்களைத் தவிர்த்து, மிக அமைதியாகவே, தேர்தல் நடந்து முடிந்தது.

தேர்தல் முறை என்ன?

மாகாணத் தேர்தலில், ஒரு வாக்காளர், அரசியல் கட்சிக்கு தனியாகவும், வேட்பாளர்களுக்கு தனியாகவும் ஓட்டளிக்க வேண்டும்.ஓட்டு சீட்டில், முதலில் அரசியல் கட்சியும், அதன் சின்னமும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் கீழே, வேட்பாளர்களும், அவர்களின் சின்னம் மற்றும் எண்ணும் இருக்கும்.முதலில், அரசியல் கட்சிக்கு ஓட்டளித்த பின், வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும். ஒரு வாக்காளர், மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்ய ஓட்டளிக்க வேண்டும். இதன் மூலம், நான்கு ஓட்டுகளை, ஒரு வாக்காளர் போட வேண்டும்.

வட மாகாண வாக்காளர்கள் எவ்வளவு?

இந்தியாவை ஒப்பிடுகையில், இலங்கையில் நடக்கும் மாகாணத் தேர்தல், நகராட்சி தேர்தலுக்கு ஒப்பானது. வட மாகாணத்தில், 4.50 லட்சம் வாக்காளர் தான் உள்ளனர். இவர்களில், ஆண், பெண் சரிபாதியாக இருப்பர். வட மாகாணத்தில், 823 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.ஒரு சாவடிக்கு, ஏழு முதல், 10 பேர் வரை தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில், பெரும் பகுதியினர் தமிழர்களே.வட மாகாணத் தேர்தலில், 67 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். 25 துணையாக இருந்தது. இலங்கையின்ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் தேர்தலில், இந்தளவு ஓட்டளித்து உள்ளது, நல்ல அடையாளமாகவே உள்ளது.

பிரசாரம் எப்படி இருந்தது?

தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் அங்கு இல்லை. இருந்தாலும், தேர்தல் பிரசாரத்தை முடிக்க வேண்டிய காலக்கெடுவை தாண்டி, பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.
ஓட்டுப் பதிவுக்கு முந்தைய நாள் கூட, அரசு திட்டங்களை செயல்படுத்துவது, புதிய திட்டங்களை அறிவிப்பது போன்றவற்றை, ஆளும் கட்சியினர் செய்தனர். ஆளும் கட்சியினரை தடுக்க, தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை.இதற்கு, தேர்தல் ஆணையம் வலுவில்லாமல் இருப்பதே காரணம். ஆளும் கட்சி, இலவசங்கள் உட்பட சகல விதமான யுத்திகளையும் பிரசாரத்தில் பயன்படுத்தியது.ஆனால், டி.என்.ஏ.,வுக்கு இந்தளவு செல்வாக்கில்லை. வெளியிலிருந்தும் பெரியளவில் உதவிகள் கிடைக்கவில்லை. இதையெல்லாம், தேர்தல் பணியிலிருந்த பலரும் எங்களிடம் கூறினர்.
 
எதிர்க்கட்சியினரை, பலவீனப்படுத்தும் நோக்கில், தாக்குதல்களும்,பொய் பிரசாரங்களும் தங்குதடையின்றி நடந்தன. இதற்கு, டி.என்.ஏ., வேட்பாளர் ஆனந்தி தாக்கப்பட்டது ஒரு சான்று. இதை விசாரிக்க சென்ற, தன்னார்வ குழுவை சேர்ந்தவரும் தாக்கப்பட்டார். இதற்கு, ராணுவம் இப்போக்கிற்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள், கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதற்கிடையே, இலங்கையில் வெளியாகும், ‘உதயன்' என்ற தமிழ் நாளிதழைப் போல, போலியான ஒரு இதழை வெளியிட்டு, அதில், ஆனந்தி மற்றும் டி.என்.ஏ., வேட்பாளர்கள், ஆளும் கட்சிக்கு தாவிவிட்டனர் என, செய்தி வெளியானது.இதை, உள்ளூர் ‘டிவி’ சேனலும் ஒளிபரப்பியது. ‘உதயன்' பத்திரிகை உரிமையாளர், `உதயன்' நாளிதழ் போல், போலியான ஒன்றை வெளியிட்டுள்ளனர் என, அறிக்கையும் வெளியிட்டார். இப்படி, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்த குழப்பங்களை ஏற்படுத்தினர்.

ஓட்டு பதிவு சுதந்திரமாக நடந்ததா?

வட மாகாணத்தில் ராணுவம் இருந்தாலும், ஓட்டு சாவடிகளில் அவர்கள் இல்லை. ஓட்டு சாவடியில், சுதந்திரமாக ஓட்டளிக்க முடிந்தது.போரினால் வெளியேற்றப்பட்ட, 14 ஆயிரம் பேர், முகாம்களில் பல ஆண்டுகளாக உள்ளனர். இவர்களின், ஓட்டுகள் சொந்த ஊரில் உள்ளன. ஓட்டளிக்க, 20 முதல், 25 கி.மீட்டர் துாரம் செல்ல வேண்டும். பஸ் செலவு 100 ரூபாய் ஆகும்.முகாமில் உள்ளவர்களுக்கு, வசதியில்லாத நிலையில், இவர்களால், ஓட்டளிக்க போக முடியுமா என்ற கேள்வியை, இலங்கை தேர்தல் ஆணையத்தில் எழுப்பினோம். இதைத் தொடர்ந்து, முகாமிலிருந்து ஓட்டு சாவடிகளுக்கு செல்ல, இலவச பஸ்களை இயக்க ஒப்புக்கொண்டு, அதே போல், தேர்தல் நாளன்று, பஸ்களை இயக்கினர்.இருந்தாலும், 14 ஆயிரம் வாக்காளர்களில், 26 சதவீதம் பேர் தான் ஓட்டளித்தனர்.
 
எங்கள் குழுவில் இருந்த 20 பேரில், 19 பேர், வட மாகாணத் தேர்தலை மட்டுமே கண்காணித் தோம். பாகிஸ்தானை சேர்ந்தவர் மட்டும் மத்திய மாகாண தேர்தலை பார்வையிட சென்றுவிட்டார். வட மாகாணத்தில் தான் தேர்தல் நிலவரம் பதற்றமாக இருந்தது.தமிழர்கள் முழுமையாக ஓட்டளிக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவியது. இதனால், வட மாகாணத்தை நாங்கள் முழுமையாக கண்காணித்தோம். சுதந்திரமாக அனைத்து பகுதிகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டோம்.இலங்கை தேர்தல் விதிமுறைகளில், ஓட்டு சாவடியில் வேட்பாளரின் ஏஜன்ட்கள் இருப்பது போல், தன்னார்வ அமைப்பின்,பிரதிநிதிகளும் இருக்க அனுமதி உண்டு. இவர்களும், அனைத்து ஓட்டு சாவடிகளை கண்காணிக்கும் பணியை செய்தனர். இவர்கள் மூலம், பல இடங்களில், ராணுவத்தினர் அத்துமீறி, ஆளும்கட்சி வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும் என, தமிழர்களை மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. சில இடங்களில், வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது.மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர், 24 ஆயிரம் ரூபாய் எடுத்து செல்லப்பட்டதும் தடுக்கப்பட்டது.

தமிழர்களின் மன நிலை எப்படிஇருந்தது?

பல இடங்களில் தமிழர்களை சந்தித்து, தேர்தல் பற்றிய விவரங்களை கேட்டோம். பலர், தேர்தல் மூலம், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். தேர்தல் தொடர்பில்லாத, சில கோரிக்கைகளை கூறினர். ஆனால், அதுகுறித்து நாங்கள் எதுவும் செய்ய முடியாது என, கூறினோம். பொதுவாக, இழந்த நிலத்தை மீட்டு, மீண்டும் குடியேற வேண்டும் என்ற எண்ணம், தமிழர்களிடம் ஓங்கி நிற்கிறது. தனி நாடு போன்ற பேச்சு, தமிழர்களிடம் தென்படவில்லை.

உங்கள் குழு பரிந்துரைகள் ஏதாவது அளிக்குமா?

போர் முடிந்த நிலையில், நடக்கும் ஒரு தேர்தலை, நியாயமாகத் தான் நடத்தினோம் என, வெளியுலகிற்கு காட்ட இலங்கை அரசு தரப்பு விரும்பியது. அதனால், வெளிநாட்டு பிரதிநிதிகளை, பார்வையாளர்களாக வைத்து தேர்தலை நடத்த முன்வந்தனர்.அந்த அடிப்படையிலேயே, எங்கள் குழு அங்கு சென்றது. இருந்தாலும், தேர்தல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள், அதை நிவர்த்தி செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த பரிந்துரைகளை, தெற்காசிய நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்பிடம் அளிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment