Sunday, September 29, 2013

மட்டக்களப்பில் முதன் முறையாக வீட்டுக் கிணறுகளில் கப்பி இன மீன்கள்!!

Sunday, September 29, 2013
இலங்கை::மட்டக்களப்பு நகரை அண்மித்ததாக உள்ள கிராமங்களில் முதன் முறையாக டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கும் வீட்டுக் கிணறுகளில் கப்பி இன மீன்களை இடும் நடவடிக்கையும் இன்று  ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.

சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் நிதி அனுசரணையுடன் வவுணதீவு திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் அமுலாக்கத்துடன் வீடு வீடாகச் சென்று இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத் திட்டத்தை செய்து வருகின்றது.

திமிலைதீவு, புதூர், வீச்சுக் கல்முனை, மற்றும் சேத்துக்குடா ஆகிய மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

நுளம்புக் குடம்பிகளை அழிப்பதற்காக இயற்கை உயிரியல் வழிமுறையாக ஒரு கிணற்றுக்கு 2 கப்பி மீன்களும், 2 திலாப்பியா மீன்களும் விடப்படுகின்றன. அத்துடன் வீட்டையும் அயற் பிரதேசங்களையும் சுத்தமாக வைத்திருப்பது பற்றியும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப் படுவதாக திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எம். நவரஞ்சன் தெரிவித்தார்.

இன்றைய ஆரம்ப நிகழ்வுகளில் சுவீடன் கூட்டுறவு நிலைய கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன், திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எம். நவரஞ்சன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலசிங்கம் ரமேஸ்குமார் உட்பட இன்னும் பல இளைஞர் கழக உறுப்பினர்களும் நிகழ்வுகளில் பற்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

No comments:

Post a Comment