Tuesday, September 17, 2013

செம்மொழி மாநாட்டில் ஊழலா ? விசாரணை வருமா?.

Tuesday, September 17, 2013
சென்னை::செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி முறைகேடு செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், முகாந்தரம் இருப்பின் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வக்கீல் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க ஆட்சியின்போது 2010ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் செம்மொழி மாநாட்டு செலவு ரூ.380 கோடி என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்மொழி மாநாட்டிற்கான செலவு தொகை எவ்வளவு என்று தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தேன். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு செம்மொழி மாநாட்டிற்கு ரூ.150 கோடி செலவு செய்ததாக கூறியது.

அதே போல 2010-2011ஆம் ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் செம்மொழி மாநாட்டிற்கு ரூ.160 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, செம்மொழி மாநாட்டில் குறைந்தது ரூ.200 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது. இது சம்பந்தமாக கடந்த ஏப்ரல் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தேன். அதில் ரூ.200 கோடி ஊழல் செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. முறைகேடு செய்துள்ளதாக முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தலாம் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த அரசு எடுக்கும் முடிவின்படி செம்மொழி மாநாட்டில் ஊழல் நடந்ததா என்பது குறித்து சூடு பிடிக்கும்.

No comments:

Post a Comment