Monday, September 2, 2013

சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் பதிலளிக்கப்படும்: அரசாங்கம்!

Monday, September 02, 2013
இலங்கை::சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் பதிலளிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை மட்டுமன்றி அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய 13ம் திருத்தச் சட்டத்தை ஒர் கருவியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
சிலர் 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை வெள்ளை யானையாக கருதுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிக்க மாகாணசபைகளை வலுப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
சில தரப்பினர் தொடர்ந்தும் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
உள்நாட்டு விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படாவிட்டால் சர்வதேச ரீதியான விசாரணகைள் நடத்தப்பட வேண்டுமென அண்மையில் நவனீதம்பிள்ளை தெரிவித்ததன் மூலம் இந்த சதி திட்டம் அம்பலமாகியுள்ளது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment