Tuesday, August 13, 2013
நோர்வே::மக்களின் மன நிலையை அறிந்து கொள்வதற்கு நோர்வே பிரதமர் ஒரு நாள் மாத்திரம் டெக்ஸி சாரதியாக மாறியிருக்கின்றார்.
நோர்வே::மக்களின் மன நிலையை அறிந்து கொள்வதற்கு நோர்வே பிரதமர் ஒரு நாள் மாத்திரம் டெக்ஸி சாரதியாக மாறியிருக்கின்றார்.
நோர்வேயில் வரும் செப்டெம்பர் மாதம் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய நோர்வே பிரதமரின் செல்வாக்கு சரியக்கூடும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில், மக்களின் மன நிலையை நேரில் கள ஆய்வு செய்து தெரிந்துக்கொள்ள பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல் டென்பர்க் முடிவு செய்தார். விளம்பர நிறுவனம் ஒன்றும் அவரது முடிவுக்கு துணை நின்றது.
இதனையடுத்து, தலைநகர் ஒஸ்லோவில் ஒரு பகல் முழுவதிலும் அவர் டெக்ஸி சாரதியாக இருந்துள்ளார். சராசரி டெக்ஸி சாரதியாக சீருடை அணிந்து அவர் பயணிகளை ஏற்றிச் சென்றாலும், நாடு முழுவதும் பிரபலமான பிரதமரின் முகத்தை கண்ணாடி வழியாக பார்த்த சிலர் அவரை அடையாளம் கண்டுபிடித்து விட்டனர். ஒரு சிலர் மட்டும் டெக்ஸியை விட்டு இறங்கினோமா மீற்றர் கட்டணத்தை கொடுத்தோமா என்று சென்றுள்ளனர்.
சாரதி இருக்கைக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருந்த வீடியோ கமேரா மூலம் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல் டென்பெர்க்கின் 'பேஸ் புக்' பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அனுபவம் பற்றி கூறிய ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் 'ஒஸ்லோ நகரம் முழுவதும் நான் பிரபலமானவன். காரின் பின் சீட்டில் நான் அமர்ந்து செல்வதை தான் மக்கள் பார்த்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு நானே காரை ஓட்டிச் சென்றமை புதிய அனுபவம் போல் இருந்தது.
பல பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கும் இடம் ஒன்று உண்டு என்றால், அது டெக்ஸி பயணத்தின் போதுதான் என்று கூறலாம். மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்காகத் தான் இந்த முடிவை தேர்வு செய்தேன்' என்றார்.
டெக்ஸியில் பயணியை ஏற்றிச் சென்ற ஒரு தருணத்தில் 'கிளட்ச்' என்று நினைத்து அவர் 'பிரேக்'கை அழுத்திவிட டெக்ஸி நிலை தடுமாறிய சுவாரஸ்ய சம்பவமும் இந்த பயணத்தில் உண்டு.
தேர்தலில் தோற்று விட்டால் முழு நேர டெக்ஸி சாரதியாக ஆகும் உத்தேசம் உள்ளதா என நிருபர்கள் பிரதமரிடம் கேட்டதற்கு, 'இந்த நாட்டுக்கும், டெக்ஸி பயணிகளுக்கும் ஒரு டெக்ஸி சாரதியாக இருப்பதைவிட, நாட்டின் பிரதமர் என்ற முறையில் சிறந்த சேவையாற்ற முடியும் என நான் நம்புகிறேன்' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார்.

No comments:
Post a Comment