Monday, August 19, 2013

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொய்களையும் கட்டுக்கதைகளையும் கூறியே பிரசாரத்தில் ஈடுபடுகிறது: சுசில் பிரேமஜயந்த!

Monday, August 19, 2013
இலங்கை::தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொய்களையும் கட்டுக்கதைகளையும் கூறியே பிரசாரத்தில் ஈடுபடுகிறது. ஏனைய மாகாணங்களில் ஆட்சியமைப்பதுபோல் வடமாகாணத்திலும் நாமே ஆட்சியமைப்போம். இவ்வாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த யாழ்ப்பாணத்தில் நேற்று தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் யாழ்.மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-
 
ஏனைய மாகாணங்களில் ஆட்சியமைப்பதுபோல் வடமாகாணத்திலும் நாமே ஆட்சியமைப்போம். வடமாகாண சபைத் தேர்தல் அமைதியான முறையிலும் நீதியான முறையிலும் நடைபெறவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏனைய தேர்தல்களைப்போல் இந்தத் தேர்தலிலும் பொய்களையும் கட்டுக்கதைகளையும் பிரசாரம் செய்து வருகின்றது.
 
கூட்டமைப்பு எந்தக் காலத்திலாவது அபிவிருத்தி வேண்டுமென்றோ முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கவேண்டுமென்றோ கூறியதில்லை.வெறுமனே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தேவையென்று கூறி அதனை பெற்றுக்கொள்வோம் என்று கூறுகின்றது. நான் மாகாண சபை தொடர்பில் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்கினேஸ்வரனிலும் பார்க்க நான் அதிகப்படியாக தெரிந்து வைத்துள்ளேன். இலங்கையில் மற்ற மாகாணங்களைவிட மேல் மாகாண சபையில் 27.5 வீதமான மக்கள் அதிகமாக உள்ளனர். இச் சபையில் நான் முதலமைச்சராக சேவையாற்றியுள்ளேன். இத்தகைய நிலையில் காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எவ்விதமான பிரச்சினைகளும் வந்ததில்லை.
 
மத்திய அரசின் கீழ் உள்ள பொலிஸ் சேவையே போதுமானது.மாகாணங்கள் ரீதியான பொலிஸ் அதிகாரம் தேவையில்லை. இந்தியா அமெரிக்கா போன்ற பெரியநாடுகளுக்கே இது பொருந்தும். இலங்கையில் 30 தொடக்கம் 50 கிலோ மீற்றர் தூர எல்லையிலேயே மாகாணங்கள் உள்ளன. எனவே இங்கு மாகாண பொலிஸ் அதிகாரம் தேவையில்லை.
 
இதேபோல் வடமாகாண சபையிலும் இத்தகைய பிரச்சினைகள் வரமாட்டாது. ஏனைய மாகாணங்களில் உள்ளதைப்போல் இம்மாகாணமும் அபிவிருத்தியைக் கொண்டதாகவே அமையும்.
மேலும் தேர்தலானது மிகவும் பழமையானது. தேர்தல் சட்டம் அண்மையிலேயே கொண்டுவரப்பட்டது. தேர்தல் சட்டத்தை அனுசரித்து செல்லவேண்டியது அனைவரது கடமையாகும். இவற்றை செய்வதன் மூலமே தேர்தல் விதிமுறைகளை மீறாது செயற்படுத்த முடியும்.
 
இதேவேளை அங்கு ஈ.பி.டி.பி.யின் வேட்பாளர் தவராசா கருத்து தெரிவிக்கையில்:-
 
நெடுந்தீவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் தாக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பி. கட்சிக்கோ அல்லது அதன் அங்கத்தவர்களுக்கோ எவ்விதமான தொடர்புமில்லை என்றார். நெடுந்தீவில் 95வீதமானவர்கள் ஈ.பி.டி.பி.யின் ஆதரவாளர்களே . அங்கு நடைபெற்ற சம்பவமானது அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவின் பழைய பதாகையை கிழித்தபோதே அங்கு சச்சரவொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இச் சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் எவ்விதமான முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லையென என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment