Sunday, July 28, 2013

வடக்கில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்க முடியாது: கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு!.

Sunday, July 28, 2013
இலங்கை,வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஒருபோதும் ஈடுபடவுமில்லை. இனிமேலும் ஈடுபடாது. அதுமட்டுமன்றி வடக்கில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கவேண்டிய தேவையும் இல்லை." இவ்வாறு இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நேற்றுத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான். இதற்கமைய அந்தத் தேர்தல் நடவடிக்கைகள் சிவில் அதிகாரிகளாலும் சட்ட நடவடிக்கைகள் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இராணுவத்தின் தலையீடு ஒருபோதும் இல்லை. இவ்வாறான நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பெரும் வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்குத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனத்திலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டி பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்த சம்பந்தன், இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வினவியபோதே இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஒருபோதும் ஈடுபடவில்லை. இனிமேலும் ஈடுபடாது. வடமாகாணத்தை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டு, அங்கு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான்.
இதற்கமைய வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் சிவில் அதிகாரிகளும், சட்ட நடவடிக்கைகளில் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயங்களில் இராணுவம் ஒருபோதும் தலையிடுவதில்லை. இவ்வாறானநிலையில் வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமன விவகாரங்களிலும் இராணுவம் தலையிடுகின்றது என்பது பொய்க்குற்றச்சாட்டாகும். இதனை நாம் அடியோடு நிராகரிக்கிறோம். இதுதொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கலாமே. ஆனால், பொலிஸில் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

வடக்கில் சட்ட அமுலாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் பொலிஸார்தான் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம். வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்களுக்கான சேவையை மட்டுமே இராணுவம் செய்கின்றது. அதுமட்டுமன்றி, பிரிவினைவாதிகள் உள்ளிட்ட வேறு குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபடுகின்றது. இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எமக்குப் பெரும் வேதனையளிக்கிறது என்றார் ருவண் வணிகசூரிய.

No comments:

Post a Comment