Wednesday, June 05, 2013கொல்கத்தா::உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்-மந்திரிகள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்குப் பதிலாக மாநில நிதி மந்திரி அமித் மித்ரா மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
மம்தா பானர்ஜி மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்? என்பது குறித்தும், மந்திரி அமித் மித்ராவுடன் பங்கேற்க இருக்கும் மற்ற பிரதிநிதிகள் குறித்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி நடைபெற்ற முதல்-மந்திரிகள் மாநாட்டிலும் மம்தா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற பேரணிகளில் பேசிய மம்தா பானர்ஜி, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மேற்கு வங்காளத்திடம் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துவருவதாக தாக்குதல் தொடுத்து வருகிறார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய மம்தா, மாநில அரசுகளை அச்சுறுத்துவதற்காக சி.பி.ஐ.யை பயன்படுத்தி வருவதாகவும், மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், இன்றைய முதல்-மந்திரிகள் மாநாட்டையும் அவர் புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை என்று நேற்று அறிவித்தது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment