Sunday, June 9, 2013

தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றி சில ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிடுவது கவலையளிக்கிறது: பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்!

Sunday, June 09, 2013
இலங்கை::தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றி சில ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிட்டு வருவதானது எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமய மற்றும் சமுகத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
இக்கலந்துரையாடல் பல்கலைக்கழகத்திற்கும் சமுகத்திற்குமிடையே நல்லுறவைப் பேணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை பல்கலைக்கழக பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.
 
அங்கு தலைமை வகித்து உரையாற்றிய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மேலும் கூறியதாவது;-
 
மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய வளர்ச்சி கண்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை சிலர் வேண்டுமென்றே விமர்சித்து வருகின்றனர். சிறிய விடயங்களைக் கூட பெரிதுபடுத்தி அபாண்டங்களை சுமத்துகின்றனர்.
சில ஊடகங்களில் எமது பல்கலைக்கழகம் பற்றி தவறான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இது எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு இவ்விமர்சனங்கள் ஒருபோதும் உதவப் போவதில்லை.பகிடிவதை விடயத்திலும் செய்திகள் பெரிதுபடுத்தியே வெளியிடப்படுகிறது. உண்மையில் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதைக்கு இடமளிக்கப்படாத ஒரு பல்கலைக்கழகமாக திகழ்கின்ற எமது தென் கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு முன்மாதிரியை வெளிக்காட்டி வருகின்றது.
 
1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் தற்போது 5 பீடங்களுடனும் 3500 மாணவர்களுடனும் 163 விரிவுரையாளர்களுடனும் 234 ஏக்கரில் சிறப்பாக இயங்கி வருகிறது.
 
வழமைக்கு மாறாக இம்முறை 900 மாணவர்கள் மேலதிகமாக வந்து சேர்வதனால் விடுதிப் பிரச்சினை எழுந்துள்ளது.
 
எனினும் இப்பல்கலைக்கு ஒலுவில் மகாபொல நிலையமும் மல்வத்தையில் 35 ஏக்கர் காணியும் கிடைப்பதனால் அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நம்புகின்றோம்.
 
வட-கிழக்கில் முதலாவது பொறியியல் பீடம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் தடைவையாக 99 மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு மைல்கல் என்று கூறினால் அது மிகையாகாது.
 
இந்நிலையில் சில ஊடகங்கள் இப்பல்கலைக்கழகம் பற்றி தவறான விமர்சனங்களை வழங்கி வருவது மிகவும் கவலையளிக்கிறது. ஏதாவது சந்தேகமிருந்தால், கேள்விப்பட்டால் எம்முடன் தொடர்பு கொண்டு கேட்டு விட்டு அச்செய்திகளை உண்மைத் தன்மையுடன் வெளியிட்டால் பல்கலையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் அம்பாறை கரையோரப் பிராந்தியத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமய மற்றும் சமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பகிடிவதை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து திறந்த மனதுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

No comments:

Post a Comment