Friday, June 14, 2013

அர்ஜென்டினாவில் பயங்கரம் ரயில் விபத்தில் 3 பேர் பலி: 150 பேர் படுகாயம்!

Friday, June 14, 2013
பியூனஸ் அயர்ஸ்::அர்ஜென்டினாவில் 2 ரயில்கள் மோதி கொண்டதில் பயணிகள் 3 பேர் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ். இதன் தென் பகுதியில் 30 கிமீ தொலைவில் காஸ்ட்லர் நகர ரயில் நிலையம் உள்ளது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் பயணிகள் இல்லாத ரயில் ஒன்று சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது எதிரே வந்த பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கின. நேற்று காலை 7.07 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 3 பயணிகள் இறந்தனர். இடிபாட்டில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரயில் டிரைவரும் காயம் அடைந்தார்.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர், ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் ப்ளோரென்சியோ ராண்டாஸ் கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் 24 மணி நேரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். அர்ஜென்டினாவில் கடந்த ஆண்டு நடந்த ரயில் விபத்தில் 51 பயணிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment