
Friday, June 28, 2013
இலங்கை::சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகரவுக்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறீதரன் ஆகியோருக்கு இடையே நேற்று வியாழக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
இடதுசாரி கட்சிகள் மற்றும் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு எதிராக இயங்கக்கூடியவர்கள், மேலும் இந்த
ப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று அக்கறைப்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றவர்களைச் சந்தித்து 13ஆவது திருத்தம் தொடர்பாக உரையாடி வருகின்றோம். இதன் ஒரு கட்டமாகவே தங்களையும் சந்தித்து கலந்துரையாட வந்திருக்கின்றோம் என்று புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
13ஆவது திருத்தத்தினை மாற்றியமைக்கக் கூடாதென்பதில் அமைச்சர் டியூ குணசேகர தீவிரம் காட்டுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், 13ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையினைத் தோற்கடிப்பதற்கான வழிமுறைகள் உபாயங்கள் தொடர்பிலும் அமைச்சருடன் மிகவும் ஆழமாக இருவரும் கலந்துரையாடினர் என்று புளொட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தத்தினை மாற்றும் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் காட்டிவரும் முழுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் மேலும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 1987 ஆம் ஆண்டு அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினால் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லாது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு அதற்கு ஆதரவாக அமைச்சர் டியூ குணசேகர வாக்களித்தமையையும் இவ்விருவரும் நினைவு கூர்ந்துள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment