Friday, May 3, 2013

இனவாதம், இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலான பல குற்றச்சாட்டுகளின் பேரிலே அசாத் சாலி கைது செய்யப்பட்டு விசாரணை :லக்ஷ்மன் ஹுலுகல்ல!

Friday, May 03, 2013
இலங்கை::அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் இனவாதம், இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலான பல குற்றச்சாட்டுகளின் பேரிலே கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவை என்பவற்றின் கீழே அவர் கைதானதோடு இதில் அரசியல் நோக்கம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
அசாத் சாலி 02-05-2013 காலை 7.00 மணியளவில் கொலன்னாவையிலுள்ள வீடொன்றில் வைத்து சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
 
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல், இனவாதத்தைத் தூண்டுதல், இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல், முரண்பாட்டை தோற்றுவித்தல் போன்ற செயற்பாடுகளில் இவர் ஈடுபடுவதாக பலர் சி. ஐ. டி.யில் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளார். இனங்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இவர் கருத்து கூறிவந்தார்.
 
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எதுவித பேதமுமின்றி வாழ்கின்றனர். 1950 முதல் ஆட்சிக்கு வந்த சகல ஆட்சிகளிலும் இன, மத, மோதல்கள் இடம்பெற்றன. 2005 ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் எதுவித இன, மத ரீதியான மோதலும் ஏற்படவில்லை. அதற்கு அரசாங்கம் இடமளிக்க வில்லை. அதனடிப்படையிலேயே அசாத் சாலி கைதாகி விசாரிக்கப்படுகிறார்.
நாட்டிலுள்ள சட்டப்படி இவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். ஆரம்பக்கட்ட விசாரணை முடிவிலே இவரை தடுத்து வைத்து விசாரிப்பதா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதா? என முடிவு செய்யப்படும்.இவரது கைதின் பின்னணியில் அரசியல் நோக்கம் கிடையாது. அசாத் சாலி அரசுக்கு சவாலான நபரல்ல என்றார்.
 
பொதுபலசேனா போன்ற அமைப்புகள் இனவாதத்தை தூண்டினாலும் அவற்றுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வினவப்பட்டதற்குப் பதிலளித்த அவர், மேற்படி அமைப்புகளினால் இவ்வாறான நிலை ஏற்படவில்லை. அவர்களுக்கு எதிராக முறைப்பாடு எதுவும் செய்யப்படவுமில்லை. இனவாதத்தையோ மதவாதத்தையோ தூண்டும் வகையில் செயற்படும் எத்தகைய நபருக்கும் எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment