Tuesday, May 7, 2013

இலங்கை - இந்திய எரிபொருள் ஒப்பந்தம் ரத்து!

Tuesday, May 07, 2013
இலங்கை::இலங்கை - இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பத்து வருடங்கள் பழமையான உடன்படிக்கைகளை இலங்கை தற்போது ரத்து செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இதன்படி ஐ.ஓ.சி நிறுவனம், இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் என்பன இணைந்து, திருகோணமலையில் உள்ள எண்ணெய் களஞ்சியத்தை நீண்டகால பாவனைக்கு உட்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தன.
 
எனினும் அதன் பின்னர் இந்த களஞ்சியம் அரசாங்க உடமை  என்பதால், இதில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் கைச்சாத்திட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்தநிலையில், களஞ்சியத்தின் உரிமை இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு 35 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
 
எனினும் தற்போது இந்த உடன்படிக்கையை ரத்து செய்து, அங்குள்ள களஞ்சிய சாலைகளில் இலங்கையின் எரிபொருள் நிறுவனம் ஒன்றையும் தமது எண்ணெய் இறுப்பை களஞ்சியப்படுத்த அனுமதித்தால் மாத்திரமே இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு தொடர்ந்து இந்த எண்ணெய் களஞ்சியத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
எவ்வாறாயினும் இந்த அறிவிப்புக்கு ஐ.ஓ.சி நிறுவனம் இணங்கியுள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment